தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் சிங்கப்பூரை சேர்ந்த எம்.எம். ஷிப்பிங் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலில் அடியில் உள்ள பேலஸ்ட் டேங்கை சுத்தம் செய்த போது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஷரோன், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெனிஸ்டன் ஆகிய மூன்று மாலுமிகள் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இந்த கோரவிபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு சிபிஐ (எம்) மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
கப்பல்களில் சரக்குகள் ஏற்றுகையில் ஏற்படும் சமமற்ற நிலையால் கப்பல்கள் மற்றும் மிதவைகள் கவிழும் நிலை ஏற்படுவதை தவிர்க்க மிதவை கலன்களின் அடித்தட்டில் கடல்நீரை தேக்கி வைக்கும் பேலஸ்ட் வாட்டர் டேங்குகள் அமைக்கப்பட்டிருக்கும். அந்த டேங்கை சுத்தம் செய்யும் போது வெளிக்காற்றை உள்செலுத்த ஏற்பாடு செய்வது, ஆக்சிஜன் சிலிண்டர்களை பயன்படுத்துவது போன்ற பாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும். இத்தகைய பாதுகாப்பு நடைமுறைகள் எதுவும் எம்.எம். ஷிப்பிங் பிரைவேட் லிமிடெட் கடைபிடிக்காமல் மாலுமிகளை மிதவையின் பேலஸ்ட் வாட்டர் டேங்கிற்குள் இறக்கிவிடப்பட்டதன் விளைவே இந்த கோர விபத்திற்கு முக்கிய காரணமாகும் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுமட்டுமின்றி, இழுவை கப்பல் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினை கண்டும் – காணாமலும் வ.உ.சி. துறைமுக நிர்வாகம் பாதுகாப்பில் செய்து கொள்ளும் சமரசமும், உரிய பாதுகாப்பு துறை ஊழியர்களை நியமனம் செய்யாமல் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிப்பதும் தான் துறைமுகங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படுவதற்கும், உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கும் காரணமாக அமைகிறது. இதுபோன்ற விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கும் ஏற்பாடுகள் இல்லாததும் சமூக அமைதியை குலைக்கும் நடவடிக்கைகளாக மாறும் வாய்ப்புகளும் ஏற்படுகிறது.
எனவே, தூத்துக்குடி துறைமுக மிதவை கப்பலில் உயிரிந்த மூன்று மாலுமிகளின் குடும்பங்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிடவும், துறைமுகங்களில் முழுமையான பாதுகாப்பை உத்திரவாதம் செய்யவும், கப்பல் நிர்வாகங்கள் பாதுகாப்பு நடைமுறைகளை உறுதியாக கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டுமெனவும் ஒன்றிய அரசை சிபிஐ (எம்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
(பெ. சண்முகம்)
மாநில செயலாளர்







