மாநில செயற்குழு

நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு மதவெறி சக்திகள் கொலை மிரட்டல்! சிபிஐ(எம்) கண்டனம்!!

Cpim WBS copy

கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்ற மதவெறி சக்திகள் முயல்வதை சுட்டிக்காட்டி மதச்சார்பற்ற சக்திகள் விழிப்போடு இருந்து மக்கள் ஒற்றுமையை பாதுகாப்பார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் சு.வெங்கடேசன் சமூக ஊடகத்தில் தெரிவித்திருந்தார். இதனால், ஆத்திரமடைந்துள்ள ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து மக்கள் கட்சி அமைப்பைச் சேர்ந்தவர்கள் தோழர் சு.வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

      பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன் உள்ளிட்டவர்கள் தோழர் சு.வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தனிப்பட்ட முறையில் அவரை அவதூறு செய்து வருகின்றனர். மதவெறி சக்திகளின் இந்த செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அவருக்கு தமிழக அரசும், தமிழக காவல்துறையும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும், கொலை மிரட்டல் விடுத்துள்ளவர்கள் மீது காவல்துறை சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

   திருப்பரங்குன்றத்தைத் தொடர்ந்து திண்டுக்கல்லிலும் பதற்றத்தை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ், பாஜகவினர் முயற்சி செய்கின்றனர். திண்டுக்கல் கோட்டையில் திப்பு சுல்தான் ஆட்சிக் காலத்தில் அபிராமி அம்மன் கோவில் சூறையாடப்பட்டதாக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா உண்மையில்லாத கட்டுக்கதை ஒன்றை கூறியுள்ளார். அம்மன் சிலையை மீண்டும் நிறுவப்போவதாகவும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

  தமிழக அரசும், காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் விழிப்போடு இருந்து சதிச்செயல்களை முறியடிக்கவும், மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

(பெ.சண்முகம்)

மாநில செயலாளர்

Leave a Reply