அமைப்பு சட்டம்

அமைப்புச் சட்டம் மற்றும் விதிகள்

1968 டிசம்பர் 23-29 தேதிகளில் கொச்சியில் நடைபெற்ற கட்சியின் 8வது அகில இந்திய மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அமைப்புச் சட்டமும், 1988 செப்டம்பர் 8-10 தேதிகளில் நடைபெற்ற மத்திய கமிட்டி கூட்டத்தில் நிறைவேறிய விதிகள் மற்றும் மதுரையில் நடைபெற்ற 9வது அகில இந்திய மாநாடு. விஜயவாடாவில் நடைபெற்ற 11வது அகில இந்திய மாநாடு. கல்கத்தாவில் நடைபெற்ற 12வது அகில இந்திய மாநாடு. 1988 டிசம்பர் 27 முதல் 1989 ஜனவரி 1. முடிய திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 13வது அகில இந்திய மாநாடு. 1992 ஜன 3-9ல் சென்னையில் நடைபெற்ற 14வது அகில இந்திய மாநாடு மற்றும் 1995 ஏப்ரல் 3-8 வரை சண்டிகாரில் நடைபெற்ற 15வது அகில இந்திய மாநாடு மற்றும் 2012 ஏப்ரலில் நடைப்பெற்ற 20வது அகில இந்திய மாநாடுவரை நிறைவேற்றப்பட்ட திருத்தங்கள் உள்ளிட்ட பதிப்பு.

பொருளடக்கம்:

  1. பிரிவு-1
  2. பிரிவு-2
  3. பிரிவு-3
  4. பிரிவு-4
  5. பிரிவு-5
  6. பிரிவு-6
  7. பிரிவு-7
  8. பிரிவு-8
  9. பிரிவு-9
  10. பிரிவு-10
  11. பிரிவு-11
  12. பிரிவு-12
  13. பிரிவு-13
  14. பிரிவு-14
  15. பிரிவு-15
  16. பிரிவு-16
  17. பிரிவு-17
  18. பிரிவு-18
  19. பிரிவு-19
  20. பிரிவு-20
  21. பிரிவு-21
  22. பிரிவு-22
  23. பிரிவு-23
  24. பிரிவு-24
  25. பிரிவு-25

பிரிவு-1

பெயர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என்பது கட்சியின் பெயராகும்.

பிரிவு-2

குறிக்கோள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர முன்னணிப்படையாகும். நாட்டில் பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதன் மூலம், சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் ஏற்படுத்துவது கட்சியினுடைய குறிக்கோளாகும். மனிதனை மனிதன் சுரண்டுவதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் முழு விடுதலைக்கும் இட்டுச் செல்வதற்கான சரியான பாதையை பாடுபடும் மக்களுக்கு காட்டுகிற ஒரே தத்துவமான மார்க்சிசம், லெனினிசத்தையும் அதன் கோட்பாடுகளையும் தனது எல்லா நடவடிக்கைகளிலும் கட்சி தன்னுடைய வழிகாட்டியாகக் கொண்டிருக்கிறது. பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற பதாகையைக் கட்சி உயர்த்திப் பிடிக்கிறது.

பிரிவு-3

கொடி

அகலத்தைப் போல் ஒன்றரைப் பங்கு நீளம் உள்ள செங்கொடி கட்சியின் கொடியாகும். கொடியின் மத்தியில் ஒன்றுக்கொன்று குறுக்காக உள்ள அரிவாள் சுத்தியல் வெள்ளை நிறத்தில் இருக்கும்.

பிரிவு-4

உறுப்பினர் தகுதி

  1. பதினெட்டு அல்லது அதற்கு மேற்பட்ட வயது உடையவரும், இந்தியாவில் குடியிருப்பவருமான ஒருவர் கட்சியில் உறுப்பினராக தகுதியுடையவராவார். அவர் கட்சியின் திட்டத்தையும் அமைப்புச் சட்டத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். கட்சியின் ஸ்தாபனங்களில் ஒன்றில் வேலை செய்வதற்கு அவர் ஒப்புக் கொள்ள வேண்டும். கட்சி உறுப்பினர் தொகையை (நிர்ணயிக்கப்படும் கட்சி உறுப்பினர் சந்தாவையும் லெவியையும்) முறையாக செலுத்துவதற்கும் கட்சி முடிவுகளை நிறைவேற்றுவதற்கும் அவர் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஒருவர் கட்சியில் உறுப்பினராக சேருவதற்குத் தகுதியுள்ளவராவார்.
    அ) கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் சிபாரிசின் பேரில் தனி விண்ணப்பத்தின் மூலம் புதிய உறுப்பினர்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். ஒரு விண்ணப்பதாரரை சிபாரிசு செய்யும் கட்சி உறுப்பினர்கள் அந்த விண்ணப்பதாரரைப் பற்றி தாங்கள் நேரில் தெரிந்து கொண்டிருக்கும் விவரங்களிலிருந்து தகுந்த பொறுப்புணர்வுடன் விண்ணப்பதாரரைப் பற்றி முழுத் தகவலையும் சம்பந்தப்பட்ட கட்சி கிளைக்கோ அல்லது யூனிட்டிற்கோ தெரிவிக்க வேண்டும். விண்ணப்பதாரர் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவதாக இருந்தால் கட்சிக் கிளை தனது அடுத்த மேல் குழுவுக்கு சிபாரிசு செய்ய வேண்டும். கிளைக்கு அடுத்த மேல்குழு எல்லா சிபாரிசுகளின் மீதும் முடிவு செய்யும்.
    ஆ) கட்சி கிளைக்கு அடுத்த மேல் குழுவிலிருந்து மத்தியக் குழு மட்டம் வரை கட்சியின் எல்லா குழுக்களும் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை நேரடியாக சேர்த்துக் கொள்வதற்கு அதிகாரம் பெற்றுள்ளன.
  1. (அ) கட்சி உறுப்பினர் தகுதி கோரி வருகிற எல்லா விண்ணப்பங்களும் அவை தரப்பட்டு சிபாரிசு செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குள் உரிய குழுவின் முன்னால் வைக்கப்பட வேண்டும்.
    (ஆ) விண்ணப்பதாரர் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டால், அவர் அவ்வாறு சேர்க்கப்பட்ட தேதியிலிருந்து ஒரு வருட காலம் வரை ஒரு பரீட்சார்த்த உறுப்பினராகக் கருதப்படுவார்.
  1. வேறொரு அரசியல் கட்சியிலிருந்து ஸ்தல, மாவட்ட மாநில மட்டத்திலுள்ள ஒரு முக்கிய உறுப்பினர், நம் கட்சியில் சேருவதாக இருந்தால் சம்பந்தப்பட்ட ஸ்தல, மாவட்ட, மாநில கட்சிக் குழு அனுமதியுடன்கூட கட்சி உறுப்பினராக அவரை அனுமதிக்கும் முன்பாக கட்சியின் அடுத்த மேல் குழுவின் அங்கீகாரம் பெறுவது அவசியமாகும்.

(சில விதிவிலக்கான நிலைமைகளில் மத்தியக் குழுவோ, அல்லது மாநிலக் குழுவோ இவ்வித அங்கத்தினர்களை முழு உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு ஒரு மாநிலக் குழு ஒருவரைச் சேர்க்கும் முன் மத்தியக் குழுவின் அனுமதியைப் பெறவேண்டும்.)

  1. கட்சியிலிருந்து ஒருமுறை வெளியேற்றப்பட்ட உறுப்பினர்களை மீண்டும் கட்சியில் அனுமதிப்பது பற்றி வெளியேற்றத்தை ஊர்ஜிதம் செய்த கட்சிக்குழுவோ அல்லது அதற்கு அடுத்த மேல் குழுவோ தான் தீர்மானிக்க வேண்டும்.
  2. கட்சியின் முழு உறுப்பினர்களுக்குள்ள அதே கடமைகளையும் உரிமைகளையும் பரீட்சார்த்த உறுப்பினர்களும் பெற்றிருக்கின்றனர். ஆனால் மற்றவர்களைத் தேர்ந்தெடுக்கவோ, தாங்களே தேர்ந்தெடுக்கப்படவோ எந்த ஒரு பிரச்சனையிலும் வாக்களிக்கவோ அவர்களுக்கு உரிமை கிடையாது.
  3. பரீட்சார்த்த உறுப்பினர்களை சிபாரிச செய்கிற கட்சிக் கிளையோ அல்லது அவர்களைக் கட்சியில் சேர்த்துக் கொள்கிற கட்சிக்குழுவோ கட்சியின் வேலைத்திட்டம், கட்சியின் அமைப்புச் சட்டம், கட்சியின் நடைமுறைக் கொள்கைகள் ஆகியவற்றைப் பற்றி ஆரம்ப போதனையை அவர்களுக்கு அளிக்க வகை செய்ய வேண்டும். அவர்களை ஒரு கட்சிக் கிளையின் அல்லது யூனிட்டின் உறுப்பினர்களாகச் செயல்படுவதற்கு ஏற்பாடு செய்து அவர்களது வளர்ச்சியை கவனித்துவர வேண்டும்.
  4. பரீட்சார்த்த காலம் முடியும்பொழுது சம்பந்தப்பட்ட கட்சிக் கிளையோ அல்லது கட்சிக் குழுவோ ஒரு பரீட்சார்த்த உறுப்பினர் கட்சியில் முழு உறுப்பினர் ஆவதற்குத் தகுதி பெற்றிருக்கிறாரா என்பதை விவாதிக்க வேண்டும். ஒரு பரீட்சார்த்த உறுப்பினர் தகுதியற்றவர் என்று காணப்பட்டால் கட்சிக் கிளையோ அல்லது குழுவோ அவரது பரீட்சார்த்த உறுப்பினர் தகுதியை ரத்து செய்ய வேண்டும். முழு உறுப்பினர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் குறித்து ஒரு அறிக்கை சம்பந்தப்பட்ட கிளையினாலோ கட்சி குழுவினாலோ அடுத்த மேல் குழுவுக்கு ஒழுங்காக அனுப்பப்பட வேண்டும்.
  5. மேல் குழு அறிக்கையை பரிசீலனை செய்தபின் அறிக்கையை அனுப்பியுள்ள கிளை அல்லது கட்சிக் குழுவுடன் கலந்தாலோசித்த பின் அவற்றில் எந்த ஒரு முடிவையும் திருத்தவோ, மாற்றவோ செய்யலாம். மாவட்ட, மாநில குழுக்கள் பரீட்சார்த்த உறுப்பினர்களை சேர்ப்பது குறித்தும், அவர்களை முழு உறுப்பினர்களாக ஏற்பது குறித்தும் மேற்பார்வையிடும் அதிகாரத்தை நிர்வகிக்கும். இது குறித்து கீழ்க் குழுக்களின் முடிவை மாற்றவோ, நிராகரிக்கவோ மாவட்டக் குழுவுக்கும், மாநிலக் குழுவுக்கும் உரிமை உண்டு.
  6. கட்சியின் ஒரு உறுப்பினர் தன்னுடைய உறுப்பினர் பொறுப்பை ஒரு யூனிட்டிலிருந்து மற்றொரு யூனிட்டிற்கு மாற்ற வேண்டுமானால் தான் இருக்கும் அப்போதைய யூனிட்டின் அங்கீகாரத்துடனும், எந்த மேல் யூனிட்டின் கீழ் சம்பந்தப்பட்ட யூனிட்டுகள் இயங்குகின்றனவோ அந்த மேல் யூனிட்டிற்கு தன் யூனிட்டின் மூலம் விண்ணப்பம் அனுப்புவதின் மூலமாகவும் மாற்றிக் கொள்ளலாம். உறுப்பினரை ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கு அல்லது ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாற்றுவது சம்பந்தமான விளக்கமும், விதிகளும்…

விளக்கம்: நடைமுறையில் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு உறுப்பினர் பதிவு மாற்றம் மத்தியக்குழுவால் செய்யப்பட்ட போதிலும் குறிப்பிடப்படும் விபரங்கள் போதுமானதாக இல்லை. ஆகையால் மாநிலக்குழு ஒரு தோழரை வேறொரு மாநிலத்திற்கு மாற்றும்படி மத்தியக் குழுவிடம் கோரும்போது அது ஒவ்வொரு கட்சி உறுப்பினரைப் பற்றியும் ஒவ்வொரு மட்டத்திலும் முறையான தகவல்களைப் பதிந்து வைக்கும் வகையில் அது கீழ்க்கண்ட விபரங்களைக் குறிப்பிடவேண்டும். இது மாநிலத்திற்குள் நடைபெறும் மாற்றலுக்கும் பொருந்தும்.

விதிகள்

உறுப்பினர் பதிவு மாற்றம்

  1. பதிவு மாற்றலுக்கான கடிதத்துடன் கீழ்க்கண்ட விவரங்களைத் தர வேண்டும்.

தோழரின் பெயர்:
வயது:
கட்சியில் சேர்ந்த வருடம்:
அவர் இருந்த கிளை:
அவர் பணியாற்றிய வெகுஜன அரங்கம்:
மாதலெவி/எதுவரை செலுத்தியுள்ளார்:
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அது பற்றிய விவரம்:
எந்த மாவட்டம்/மாநிலத்திலிருந்து மாற்றப்பட வேண்டும்:
எந்த மாவட்டம்/மாநிலத்திற்கு மாற்றப்பட வேண்டும்:
கட்சி உறுப்பினர் பதிவு புதுப்பித்த வருடம்:
தொடர்பு கொள்ளும் முகவரி:

துணைக்குழுக்கள்

விளக்கம்: வெகுஜனப் போராட்டங்களின் மூலம் வரும் போர்க்குணமிக்கவர்களை துணைக்குழுக்களில் சேர்த்து கட்சி உறுப்பினர்களாக அவர்களைத் தேர்வு செய்யும் வண்ணம் பயிற்றுவிக்கவும், கட்சிக் கல்வி அளிக்கவும் வேண்டுமென சால்கியா பிளீனம் பணித்துள்ளது. இதற்கு விதிகளில் வகை செய்ய வேண்டும்.

  1. வெகுஜன இயக்கங்கள் நடைபெறும் போதும் வெகுஜன ஸ்தாபனங்களில் இருந்து வரும் போர்க் குணமிக்கவர்களையும் செயலூக்கத்துடன் பங்கேற்பவர்களையும், பரந்த அனுதாபிகளின் குழுக்களான துணைக்குழுக்களில் திரட்ட கட்சிக் கிளைகள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
  2. கட்சிக் குழுக்கள் இத்தகைய துணைக்குழு உறுப்பினர்களுக்கு கட்சித் திட்டம் மற்றும் அடிப்படைக் கொள்கைகள் பற்றிய கல்விக்கும், பயிற்சிக்கும் ஏற்பாடு செய்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்கள் பரீட்சார்த்த உறுப்பினர்களாக சேருமளவிற்கு தயார் செய்ய வேண்டும்.

பிரிவு-5

கட்சி உறுதிமொழி

கட்சியில் சேரும் ஒவ்வொரு நபரும் கட்சியின் உறுதிமொழியில் கையெழுத்திட வேண்டும். அந்த உறுதிமொழியாவது:

கட்சியின் நோக்கங்களையும், குறிக்கோள்களையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். கட்சியின் அமைப்புச் சட்டத்தின்படி நடப்பதற்கும் கட்சியின் முடிவுகளை விசுவாசமாக நிறைவேற்றுவதற்கும் நான் ஒப்புக்கொள்கிறேன்.

கம்யூனிச லட்சியங்களுக்கு ஏற்ற முறையில் வாழ்வதற்குப் பாடுபடுவேன். எனது சொந்த நலன்களைக் கட்சியின் நலன்களுக்கும், மக்களுடைய நலன்களுக்கும் எப்போதும் உட்படுத்திக் கொண்டு, தொழிலாளி வர்க்கத்துக்கும் உழைப்பாளி மக்களுக்கும் நாட்டிற்கும் தன்னலமற்ற முறையில் சேவை செய்யப் பாடுபடுவேன்.

பிரிவு-6

கட்சி உறுப்பினர் பதிவேடு

உறுப்பினர் பதிவேடுகள் அனைத்தும் மாவட்டக் குழுவின் கண்காணிப்பில் வைக்கப்படவேண்டும்.

விதிகள்

கட்சி உறுப்பினர் பற்றிய ஆவணங்கள்

உறுப்பினர் பற்றிய ஆவணங்கள் மாவட்டக் குழு மேற்பார்வையில் வைக்கப்பட கட்சி உறுப்பினர்கள் பற்றிய ஆவணங்கள் உண்மைத் தன்மைக்கு உத்தரவாதம் கொடுக்க இறுதி அதிகாரம் படைத்தது மாவட்டக் குழுதான். அதன் அதிகாரப்பூர்வமான பிரதி மாவட்டக் குழுவில்தான் இருக்கும். இருப்பினும் சம்பந்தப்பட்ட மாநிலக்குழு தீர்மானிக்குமானால் ஒரு மாநிலத்தில் உள்ள இடைக்குழுக்களிடமோ அல்லது ஸ்தல குழுக்களிடமோ அத்தகைய ஆவணங்களை நிர்வகிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படும்.

பிரிவு-7

கட்சி உறுப்பினர் தகுதி தணிக்கை

  1. ஒரு உறுப்பினர் கட்சியின் எந்த ஒரு அமைப்பைச் சேர்ந்தவராக இருக்கிறாரோ அந்த அமைப்பினால் ஆண்டுதோறும் கட்சி உறுப்பினர் தகுதி தணிக்கை செய்யப்பட வேண்டும். கட்சியின் வாழ்விலும், நடவடிக்கைகளிலும் தொடர்ச்சியான காலத்துக்கும் அத்துடன் அதற்குச் சரியான காரணமின்றியும் பங்கெடுக்கத்தவறுகிற அல்லது கட்சிக்குக் கொடுக்க வேண்டிய தொகையை கொடுப்பதற்கு தவறுகின்ற எந்த ஒரு உறுப்பினரும் கட்சி உறுப்பினர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படவேண்டும்.

விளக்கம்: ஒரு கட்சி உறுப்பினர் எந்தவிதக் காரணமும் இல்லாமல் தொடர்ச்சியான காலத்திற்கு கட்சி வாழ்க்கை மற்றும் நடவடிக்கைகளில் பங்கெடுக்கத் தவறினாலும் கட்சிக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தத் தவறினாலும் அவரைக் கட்சி உறுப்பினர் பொறுப்பிலிருந்து விடுவிக்கலாம் என்று கூறப்படுகிறது. அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி தகுந்த காரணங்கள் இல்லாமல் தன்னிச்சையாக உறுப்பினர் பதவியிலிருந்து விடுவிக்கும் நடவடிக்கைக்கு எதிரான பாதுகாப்பாக இந்த விதி அமைகிறது. இது பற்றி வழிமுறை மேற்கொள்வதற்கு சில சிறப்பு விதிகள் தேவைப்படுகின்றன.

விதிகள்

அ) ஒரு கட்சி உறுப்பினரை விடுக்க விரும்பினால் சம்பந்தப்பட்ட கிளை அவ்வாறு விடுவிப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட உறுப்பினர் தனது நிலையை விளக்குவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். உறுப்பினரை விடுவிப்பது என்ற முடிவை அந்தக் கிளை மேல்குழுவுக்கு எழுத்துமூலம் தெரிவிக்க வேண்டும்.
ஆ) மேல்குழு உறுப்பினர்களைப் பதிவு செய்து ஊர்ஜிதம் செய்யும்போது விடுவிக்கப்பட்டவர்கள் பட்டியலை ஆய்வு செய்து அதன் மீது தனது திட்டவட்டமான கருத்தினைக் கூற வேண்டும்.
இ) சம்பந்தப்பட்ட குழுக்கள் கட்சி உறுப்பினர் பதிவு, விடுவித்தல், மாற்றல் மற்றும் உறுப்பினர்களின் வர்க்க சேர்க்கை அடங்கிய விவரங்களை அடுத்த மேல் குழுவுக்கு ஒரு புதுப்பித்த அறிக்கையாக அளிக்க வேண்டும்.
ஈ) ஒவ்வொரு ஆண்டும் சம்பந்தப்பட்ட கட்சி உறுப்பினர்கள் தங்களை கட்சி உறுப்பினராக புதுப்பிப்பதற்கு பூர்த்தி செய்து தர வேண்டிய புதுப்பித்தல் படிவம் ஒன்று இருக்க வேண்டும். அப்படிவம் உறுப்பினரின் வயது, கட்சியில் சேர்ந்த வருடம், வருமானம், எந்த அரங்கத்தில் வேலை செய்கிறார் ஆகிய அம்சங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
உ) உறுப்பினர் கட்டணத்திற்கான ரசீது சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு வழங்கப்பட வேண்டும்.
ஊ) ஒரு கட்சி உறுப்பினரை, உறுப்பினர் பொறுப்பிலிருந்து விடுவிக்க முடிவு செய்யப்பட்டால், அம்முடிவு உறுதிப்படுத்தப்பட்ட 30 நாட்களுக்குள் அம்முடிவினை அக்கட்சி உறுப்பினருக்கு சம்பந்தப்பட்ட கட்சி கிளை தெரியப்படுத்த வேண்டும்.
எ) கட்சி உறுப்பினர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட தகவல் கிடைக்கப் பெற்றதிலிருந்து 30 நாட்களுக்குள், விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அக்கட்சி உறுப்பினர் மேல்முறையீடு செய்திட வேண்டும்.

  1. கட்சி உறுப்பினர் பொறுப்பு குறித்து சம்பந்தப்பட்ட கிளையோ அல்லது ஒரு கட்சிக் குழுவோ நடத்துகிற தணிக்கை பற்றிய ஒரு அறிக்கை ஊர்ஜிதம் செய்யப்படுவதற்காகவும் பதிவு செய்யப்படுவதற்காகவும் அடுத்த மேல்குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும்.
  2. கட்சியிலிருந்து விடுக்கப்பட்டவர் மேல்முறையீடு செய்வதற்கு உரிமை உண்டு.

பிரிவு-8

உறுப்பினர் பதவிலியிருந்து ராஜினாமா செய்தல்

  1. கட்சியிலிருந்து ராஜினாமா செய்ய விரும்புகிற ஒரு உறுப்பினர் தான் சேர்ந்திருக்கிற ஒரு கட்சிக்கிளை அல்லது கட்சி யூனிட்டிற்கு தன்னுடைய ராஜினாமாவை அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட யூனிட் அதை ஏற்றுக் கொள்ளலாம். அவ்வாறு ஏற்றுக் கொண்டு கட்சி உறுப்பினர் பட்டியலிலிருந்து அவரது பெயரை நீக்க அந்த யூனிட் தீர்மானித்து அவ்விஷயத்தை அடுத்த மேல்குழுவுக்கு தெரியப்படுத்தலாம். ராஜினாமா அரசியல் காரணத்தின் பேரில் செய்யப்பட்டிருந்தால் அந்த ராஜினாமாவை யூனிட் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டு அந்த உறுப்பினரைக் கட்சியிலிருந்து வெளியேற்றலாம்.
  2. கட்சியிலிருந்து ராஜினாமா செய்ய விரும்புகிற ஒரு கட்சி உறுப்பினர் கட்சியிலிருந்து வெளியேற்றும் அளவுக்கு கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய கடுமையான குற்றச்சாட்டுக்கு உள்ளாகக் கூடியவராக இருந்தால், மேலும் அவர் மீதுள்ள குற்றச்சாட்டு உறுதியானதாக இருந்தால் அப்படிப்பட்ட ஒரு உறுப்பினரின் ராஜினாமாவை அவரைக் கட்சியிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையாக நிறைவேற்றலாம்.
  3. கட்சியிலிருந்து வெளியேற்றுவது என்ற முறையில் நிறைவேற்றப்பட்ட இத்தகைய எல்லா ராஜினாமாக்கள் குறித்தும் உடனடியாக அடுத்த மேல் குழுவுக்கு அறிக்கை அனுப்பப்பட வேண்டும். மேல் குழுவின் உறுதிப்படுத்தலுக்கு கீழ் குழுவின் முடிவு உட்பட்டதாகும்.

பிரிவு-9

உறுப்பினர் சந்தா

  1. அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பரீட்சார்த்த உறுப்பினர்களும் ஆண்டு ஒன்றுக்கு இரண்டு ரூபாய் சந்தாவாக செலுத்த வேண்டும். இந்த ஆண்டு சந்தா, கட்சியில் சேரும் பொழுதும், ஒவ்வொரு ஆண்டு மார்ச் மாத முடிவுக்குள்ளும் சம்பந்தப்பட்ட உறுப்பினரால் கட்சியின் கிளையின் அல்லது யூனிட்டின் செயலாளரிடம் செலுத்தப்பட வேண்டும். உரிய காலத்தில் அவர் சந்தாவை செலுத்தாவிடில், அவரது பெயர் கட்சி உறுப்பினர் பட்டியலிலிருந்து நீக்கப்பட வேண்டும். சூழ்நிலைகள் உரிய காலத்தை நீடிக்க வேண்டிய நிலையை வற்புறுத்தினால் மத்தியக் குழு இக்காலத்தை நீடிக்கலாம்.

விளக்கம்: “உறுப்பினர் சந்தாவை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் இறுதிக்குள் யூனிட் (அல்லது) கிளைச் செயலாளரிடம் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் செலுத்த வேண்டும்.

மார்ச் இறுதியில் உறுப்பினர் சந்தாவை கிளைகளுக்கு செலுத்தும்போது கிளைகள் அவற்றை மாவட்ட மற்றும் மாநிலக் குழுக்களுக்கு அனுப்பி வைக்க கால அவகாசம் தேவைப்படுகிறது. நடைமுறையில் பல்வேறு காலங்களில் மொத்த உறுப்பினர் சந்தாவை மாநிலக் குழுக்களிடமிருந்து மத்தியக் குழு பெறுகிறது. தற்போது இக்காலம் ஏப்ரலில் இருந்து டிசம்பர் வரை கூட நீடிக்கிறது. உறுப்பினர் சந்தா, மையத்தை வந்தடைவதற்கான இறுதியான தேதி நிச்சயிக்கப்பட வேண்டும்.

விதிகள்

  1. அ) ஒவ்வொரு ஆண்டும் கட்சி உறுப்பினர் புதுப்பித்தல் மார்ச் 31க்குள் முடிக்கப்பட வேண்டும்.
    ஆ) மாநில குழுக்களின் உறுப்பினர் கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் மே 31க்குள் மையத்திற்கு செலுத்த வேண்டும்.
    இ) எதிர்பாராத நிலைமையையொட்டி தேதியை நீட்டிக்க வேண்டியிருந்தால் அது மத்தியக் குழு அரசியல் தலைமைக்குழுவால் மட்டுமே முடியும்.
    ஈ) நடப்பு ஆண்டில் பரீட்சார்த்த உறுப்பினராக புதிதாக பதிவு செய்பவர்களின் உறுப்பினர் கட்டணத்தை மார்ச் 31 அல்லது அதற்கு முன்பாக செலுத்த வேண்டும்.
  1. கட்சி கிளைகளாலோ அல்லது யூனிட்டுகளாலோ வசூலிக்கப்படும் எல்லா கட்சி சந்தாக்களும் தகுந்த கட்சி குழுக்கள் மூலம் மத்தியக் குழுவிடம் சேர்ப்பிக்கப்படும்.

குறிப்பு: கட்சி உறுப்பினர்களைப் புதுப்பிக்கும் காலவரையறை போக ஆண்டு முழுவதும் பரீட்சார்த்த உறுப்பினர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இவர்களுடைய சந்தாத் தொகையை தனியாக மத்தியக் குழுவுக்கு செலுத்த வேண்டும்.

பிரிவு-10

கட்சி லெவி

கட்சியின் மத்தியக் குழுவால் வசூலிக்கப்படும் முறையில் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும் மாதந்தோறும் லெவியை செலுத்த வேண்டும். ஆண்டு முறையிலோ அல்லது பருவகாலங்களின் முறையிலோ வருமானத்தைக் கொண்டிருப்பவர்கள். பருவகாலத்தின் ஆரம்பத்திலோ அல்லது ஒவ்வொரு கால் ஆண்டின் துவக்கத்திலோ அதே விகிதாச்சார அடிப்படையில் தங்களது லெவியை செலுத்த வேண்டும். ஒரு உறுப்பினர் தனது லெவியை அது பாக்கி விழுந்த மூன்று மாதங்களுக்குள் செலுத்தத் தவறினால் அவரது பெயர் கட்சி பட்டியலிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

விதிகள்

  1. கட்சி உறுப்பினர்களின் லெவி விகிதங்கள்

வருவாய் லெவி (%)

மாத வருமானம் ரூ.1000க்கு குறைவு₹1
ரூ. 3001 – 50000.50%
ரூ. 5001 – 70001.00%
ரூ. 7001 – 80001.00%
ரூ. 8001 – 10,0001.00%
ரூ. 10,001 – 20,0001.50%
ரூ. 20,001 – 30,0002.00%
ரூ. 30,001 – 40,0002.50%
ரூ. 40,001 – 60,0003.00%
ரூ. 60,001 க்கு மேல்4.00%
வருவாய் லெவி (%)
  1. ஒரு கட்சி உறுப்பினர் காலாண்டிற்கு அல்லது ஆண்டுக்கு ஒரு முறை லெவி செலுத்தினால் அவரது ஆண்டு வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு அவரது மாத வருமானத்தைக் கணக்கிட வேண்டும். அவர் செலுத்த வேண்டிய லெவி தொகையை மேற்கண்ட விகிதத்தில் கணக்கிட வேண்டும்.
  2. உறுப்பினரின் மனைவி அல்லது குடும்பத்தின் வேறு ஒரு உறுப்பினர் சம்பாதித்து குடும்ப வருமானத்தில் பங்களிப்பவராக இருந்து, அவர் கட்சி உறுப்பினராக இல்லாத பட்சத்தில் அவரது வருமானத்தை லெவி விகிதம் கணக்கிட எடுத்துக் கொள்ளக்கூடாது.

விளக்கம்:

அ) வருமானம் என்பது சம்பளம் பெறும் ஊழியர் மற்றும் கூலி சம்பாதிப்பவர்களை பொறுத்தவரை பஞ்சப்படி மற்றும் இதர படிகள் உள்ளிட்ட அவர்களது மொத்த வருமானமாகும். இத்துடன் நிலம், வியாபாரம் மற்றும் வீட்டின் மூலம் கிடைக்கும் கூடுதல் வருமானமும் சேர்த்துக் கொள்ளப்படவேண்டும்.

ஆ) விவசாயிகளைப் பொறுத்தமட்டில், அவர்களுக்குக் கிடைக்கும் வருமானத்தில் விவசாய உற்பத்திக்காக அவர்கள் உண்மையாக செலவிட்ட தொகையை கழித்துக் கொள்ள வேண்டும்.

இ) கூட்டுக் குடும்ப வருமானத்தில் ஒருவர் வாழ்பவராக இருந்தால் அவ் வருமானத்தில் அவருடைய பங்கு.

ஈ) வேலையின்மை, வறட்சி அல்லது நோய் போன்ற தவிர்க்க முடியாத காரணங்களுக்காக லெவி வசூலிப்பதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமானால் அதற்கான முடிவுகளை சம்பந்தப்பட்ட மாநிலக் குழு மேற்கொள்ளும்.

உ) வசூலாகும் லெவியில் ஸ்தல, பகுதி, மாவட்ட மற்றும் மாநில குழுவுக்கு எத்தனை சதவிகித பங்கு என்பதை சம்பந்தப்பட்ட மாநிலக் குழு முடிவு செய்ய வேண்டும்.

பிரிவு-11

கட்சி உறுப்பினர்களின் கடமைகள்

  1. கட்சி உறுப்பினர்களின் கடமைகள் பின்வருமாறு:
    அ) தாங்கள் சேர்ந்திருக்கும் கட்சி ஸ்தாபனத்தின் வேலைகளில் முறையாகப் பங்கெடுத்துக் கொள்ளுவது, கட்சியின் கொள்கை முடிவுகளையும் கட்டளைகளையும் விசுவாசமாக நிறைவேற்றுவது.
    ஆ) மார்க்சிசம் லெனினிசத்தை கற்பது. மார்க்சிசம் லெனினிசத்தைப் பற்றிய தங்களது அறிவின் மட்டத்தை உயர்த்திக் கொள்ளப் பாடுபடுவது.
    இ) கட்சி பத்திரிகைகள், கட்சி பிரசுரங்களைப் படிப்பது ஆதரிப்பது அவற்றை மக்கள் மத்தியில் பரப்புவது.
    ஈ) கட்சியின் அமைப்புச் சட்டம் கட்சிக் கட்டுப்பாடு ஆகியவற்றை கடைப்பிடிப்பது. அத்துடன் கம்யூனிசத்தின் மகோன்னத இலட்சியங்களுக்கு ஏற்பவும் தொழிலாளி வர்க்க சர்வதேசியத்தின் உணர்வுடனும் நடந்து கொள்ளுவது.
    உ) சொந்த நலன்களை மக்கள் நலன்களுக்கும் கட்சியின் நலன்களுக்கும் உட்படுத்துவது.
    ஊ) மக்களுக்கு மனப்பூர்வமான சேவை செய்வது, மக்களுடனுள்ள தொடர்புகளை இடைவிடாது பலப்படுத்திக் கொண்டிருப்பது; மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளுவது; மக்களது அபிப்பிராயங்களையும் கோரிக்கைகளையும் கட்சிக்கு அறிவிப்பது; விதிவிலக்கு கொடுக்கப்பட்டாலொழிய கட்சியின் வழிகாட்டுதலின் கீழ் வெகுஜன ஸ்தாபனமொன்றில் வேலை செய்வது.
    எ) கட்சித் தோழர்கள் ஒருவருக்கொருவர் தோழமை உறவுகளை வளர்த்துக் கொள்வது, கட்சிக்கு ஒரு சகோதர உணர்வை வளர்க்க இடைவிடாமல் பாடுபடுவது
    ஏ) ஒருவருக்கொருவர் உதவி செய்யும் நோக்கத்துடன் விமர்சனம், சுய விமர்சனத்தைக் கடைப்பிடிப்பது. அத்துடன் ஒவ்வொரு நபரின் வேலையையும், கூட்டு வேலையையும் அபிவிருத்தி செய்யும் நோக்கத்துடன் விமர்சனம், சுய விமர்சனத்தைக் கடைப்பிடிப்பது.
    ஐ) கட்சியின் பால் திறந்த மனதுடனும் நேர்மையாகவும், உண்மையாகவும் நடந்துகொண்டு கட்சி தன்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு துரோகம் இழைக்காமல் இருப்பது.
    ஒ) கட்சியின் ஒற்றுமையையும், ஐக்கியத்தையும் பாதுகாப்பது, தொழிலாளி வர்க்க விரோதிகளுக்கு எதிராகவும் நாட்டின் விரோதிகளுக்கு எதிராகவும் விழிப்புணர்ச்சியுடன் செயலாற்றுவது.
    ஓ) கட்சி, தொழிலாளி வர்க்கம், நாடு ஆகியவற்றின் விரோதிகளிடமிருந்து வரும் தாக்குதல்களிலிருந்து கட்சியைப் பாதுகாத்து, கட்சியின் இலட்சியத்தை உயர்த்திப்பிடிப்பது.
  1. மேலேயுள்ள கடமைகளை கட்சி உறுப்பினர்கள் நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துவதும், இந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு, சாத்தியமான ஒவ்வொரு வழியிலும் அவர்களுக்கு உதவுவதும் கட்சி ஸ்தாபனத்தின் கடமையாகும்.

பிரிவு-12

கட்சி உறுப்பினர்களின் உரிமைகள்

  1. கட்சி உறுப்பினர்களின் உரிமைகள் பின்வருமாறு:
    அ) கட்சி அமைப்புகளையும் கட்சி குழுக்களையும் தேர்ந்தெடுப்பது: தானும் அவற்றிற்கு தேர்ந்தெடுக்கப்படுவது.
    ஆ) கட்சி கொள்கைகளையும் முடிவுகளையும் உருவாக்குவதில் தன் பங்கை செலுத்தும் முறையில் விவாதத்தில் பங்கெடுத்துக் கொள்வது.
    இ) கட்சியில், தான் செய்யும் வேலை குறித்து ஆலோசனைகளை முன்வைத்தல்.
    ஈ) கட்சி கூட்டங்களில், கட்சி குழுக்களைப் பற்றியும் கட்சியில் செயலாற்றும் தோழர்கள் பற்றியும் விமர்சனம் செய்வது.
    உ) தனக்கெதிராக கட்சியின் ஒரு யூனிட் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்கையில் தன்னுடைய யூனிட்டில், தான் நேரில் விசாரிக்கப்பட வேண்டுமென்று கோரும் உரிமையுண்டு.
    ஊ) எந்த ஒரு உறுப்பினரும் ஸ்தாபன பிரச்சனை குறித்து ஒரு கட்சிக் குழுவின் எந்த ஒரு முடிவிலிருந்தும் மாறுபட்டால் தனது கருத்தை அதற்கு அடுத்த மேல் குழுவுக்கு சமர்ப்பிக்க அவருக்கு உரிமை உண்டு. அரசியல் வித்தியாசம் ஏற்பட நேர்ந்தால் தனது கருத்தை மத்தியக் குழு உள்ளிட்ட எல்லா மேல் குழுவுக்கும் சமர்ப்பிக்க அவருக்கு உரிமை உண்டு. இது மாதிரியான எல்லாத் தேர்வுகளிலும் கட்சி உறுப்பினர் கட்சியின் முடிவுகளை எப்போதும்போல நிறைவேற்ற வேண்டும். நடைமுறை சோதனையின் மூலமும், தோழமையான விவாதங்களின் மூலமும் வித்தியாசங்களைத் தீர்த்துக்கொள்ள முற்பட வேண்டும்.
    எ) மத்தியக் குழு உள்ளிட்ட எந்த ஒரு மேல் குழுவுக்கும், எந்த ஒரு அறிக்கையையோ வேண்டுகோளையோ அல்லது புகாரையோ அளிப்பதற்கு கட்சி உறுப்பினர்களுக்கு உரிமையுண்டு.
  1. இந்த உரிமைகள் மதிக்கப்படுகின்றனவா என்று பார்த்துக் கொள்வது கட்சி அமைப்புகளின் கட்சி நிர்வாகிகளின் கடமையாகும்.

பிரிவு-13

ஜனநாயக மத்தியத்துவத்தின் கோட்பாடுகள்

  1. கட்சியின் அமைப்பு ஜனநாயக மத்தியத்துவத்தின் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இக்கோட்பாடுகளே கட்சியின் உள் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகும். உட்கட்சி ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட மத்தியத்துவப்படுத்தப்பட்ட தலைமையும் மத்தியத்துவப்படுத்தப்பட்ட தலைமை வழிகாட்டலின் கீழ் ஜனநாயகமுமே மத்தியத்துவம் என்பதன் பொருளாகும்.
    கட்சி அமைப்பு என்ற முறையில் ஜனநாயக மத்தியத்துவத்தின் வழிகாட்டும் கோட்பாடுகள் வருமாறு:
    அ) கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை கட்சியின் சகல அமைப்புகளும் தேர்ந்தெடுக்கப்படும்.
    ஆ) பெரும்பான்மையின் முடிவுகளை சிறுபான்மை நிறைவேற்றும். மேல் மட்டத்திலிருக்கும் கட்சி உறுப்பினர்களின் முடிவுகளையும் கட்டளைகளையும் கீழ் மட்டத்திலிருக்கும் கட்சி அமைப்புகள் நிறைவேற்றும் கூட்டு முடிவுக்கு தனி நபர் தன்னை உட்படுத்திக் கொள்வார். கட்சியின் எல்லா அமைப்புகளும் கட்சியின் அகில இந்திய மாநாடு மற்றும் மத்தியக் குழுவின் முடிவுகளையும் கட்டளைகளையும் நிறைவேற்ற வேண்டும்.
    இ) கட்சியின் எல்லா குழுக்களும் முறையாக அதனதன் வேலைகளைப் பற்றி உடனுக்குடன் தனக்கு கீழுள்ள ஸ்தாபனத்திற்கு ரிப்போர்ட் (அறிக்கை) செய்யவேண்டும். அதேபோன்று எல்லா கீழ் குழுக்களும் அடுத்துள்ள மேல்குழுவுக்கும் அறிக்கைகள் அனுப்ப வேண்டும்.
    ஈ) எல்லா கட்சிக் குழுக்களும் குறிப்பாக தலைமை வகிக்கும் கட்சி குழுக்கள் கீழ் மட்டத்திலிருக்கும் கட்சி ஸ்தாபனங்களுடைய சாதாரண கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களுக்கும் விமர்சனங்களுக்கும் தொடர்ச்சியாக உரிய கவனம் செலுத்த வேண்டும்.
    உ) கூட்டு முடிவுகள் எடுப்பது, கூட்டு கண்காணிப்பு தனிப் பொறுப்புகள் என்ற கொள்கைகளின் அடிப்படையில் அனைத்து கட்சி குழுக்களும் செயல்படவேண்டும். கறாராக
    ஊ) சர்வதேசப் பிரச்சனைகள் அகில இந்தியத் தன்மையுள்ள பிரச்சனைகள் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அல்லது நாடு முழுவதுக்கும் ஒரே மாதிரியான முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய பிரச்சனைகள் அனைத்தையும் கட்சியின் அகில இந்திய ஸ்தாபனங்கள் ஆகிய முடிவு செய்யும். மாநில அல்லது மாவட்டத் தன்மை கொண்ட எல்லா பிரச்சனைகளையும் சாதாரணமாக, அந்தந்த மட்டத்திலுள்ள கட்சி ஸ்தாபனங்கள் முடிவு செய்யும். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் அம்மாதிரியான முடிவுகள் கட்சியின் எந்தவொரு மேல்மட்ட ஸ்தாபனத்தின் முடிவுகளுக்கும் முரணாக இருக்கக்கூடாது. மாநில ரீதியில் பிரதான முக்கியத்துவம் வாய்ந்த எந்தப் பிரச்சனையிலாவது கட்சியின் மத்தியத் தலைமை ஒரு முடிவு எடுக்க வேண்டியபொழுது சாதாரணமாக சம்பந்தப்பட்ட அந்த மாநில கட்சி ஸ்தாபனத்துடன் கலந்தாலோசித்த பிறகு அம்முடிவு எடுக்கப்பட வேண்டும். மாவட்டம் குறித்து மாநில கட்சி ஸ்தாபனம் இதே போல் நடந்து கொள்ளும்.
    எ) அகில இந்திய ரீதியில் கட்சியின் கொள்கையை பாதிக்கும் பிரச்சனைகளில் கட்சியின் நிலை முதன்முறையாக அறிவிக்கப்படும்பொழுது கட்சியின் மத்தியத்தலைமைக்குத்தான் ஒரு கொள்கைரீதியான அறிவிப்பை வெளியிட உரிமையுண்டு. கீழ் குழுக்கள் தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் மத்திய தலைமையின் பரிசீலனைக்கு குறித்த காலத்துக்குள் அனுப்ப முடியும். அனுப்பி வைக்கவும் வேண்டும்.
  1. கட்சி உறுப்பினர் அனைவரின் அனுபவத்தையும், வெகுஜன இயக்கத்தின் அனுபவத்தையும் அடிப்படையாகக் கொண்டு உள்கட்சி வாழ்க்கையில் ஜனநாயக மத்தியத்துவத்தின் பின்வரும் வழிகாட்டும் கோட்பாடுகள் செயல்படுத்தப்படும்.
    அ) கட்சியையும் அதன் கொள்கையையும் அதன் பணியையும் பாதிக்கும் எல்லா பிரச்சனைகளின் மீதும் கட்சி யூனிட்டிற்குள் சுதந்திரமான மனந்திறந்த விவாதம் நடத்துவது.
    ஆ) கட்சி கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கும் செயல்படுத்துவதற்கும் கட்சி உறுப்பினர்களை இயக்க உறுதியான முயற்சிகள் மேற்கொள்ளுதல். கட்சியின் வாழ்க்கையிலும் கட்சியின் வேலையிலும் பயனுள்ள முறையில் கட்சி உறுப்பினர்கள் ஈடுபாடு கொள்ளும் அளவுக்கு அவர்களது தத்துவார்த்த அரசியல் ஞானத்தை உயர்த்துதல்; பொதுக்கல்வியை அபிவிருத்தி செய்தல்.
    இ) ஒரு கட்சிக் குழுவுக்குள் தீவிர கருத்து வேறுபாடுகள் தோன்றும் பொழுது ஒரு உடன்பாட்டிற்கு வர சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு உடன்பாடு ஏற்படாவிட்டால் கட்சியின் தேவைகள் அடிப்படையிலும்வெகுஜன இயக்க அடிப்படையிலும் உடனடியாக ஒரு முடிவு எடுக்க வேண்டிய அவசியம் இருந்தாலொழிய மேற்கொண்டு விவாதம் நடத்துவதன் மூலம் வேறுபாடுகளை தீர்க்கும் நோக்கத்தோடு முடிவு எடுப்பதையே ஒத்திப்போட வேண்டும்.
    ஈ) மேலிருந்து கீழ்வரை எல்லா மட்டங்களிலும் விமர்சனத்தையும், சுயவிமர்சனத்தையும் குறிப்பாக கீழிருந்து வரும் விமர்சனத்தை ஊக்குவிக்க வேண்டும்.
    உ) எதேச்சதிகாரப் போக்குகளை எதிர்த்து எல்லா மட்டங்களிலும் இடைவிடாது போராட வேண்டும்.
    ஊ) எந்த ரூபத்திலும் கட்சிக்குள் கோஷ்டி மனப்பான்மையையும் கோஷ்டிகளையும் அனுமதிக்க முடியாது.
    எ) ஒருவருக்கொருவர் சகோதர உறவுகளை வளர்ப்பதன் மூலமும் பரஸ்பரம் உதவி செய்வதன் மூலமும் தோழர்களை அனுதாபத்துடன் நடத்தி தவறுகளை திருத்துவதன் மூலமும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தோழர்கள் செய்யும் தவறுகள் அல்லது சம்பவங்கள் அடிப்படையில் அல்லாமல், கட்சிக்கு அத்தோழர்கள் செய்திருக்கும் ஒட்டுமொத்தமான சேவையை கணக்கிலெடுத்துக் கொண்டு அவர்களைப் பற்றியும் அவர்களது பணியைப் பற்றியும் தீர்மானிப்பதன் மூலம் கட்சி உணர்வை பலப்படுத்த வேண்டும்.

பிரிவு-14

கட்சியின் அகில இந்திய மாநாடு

  1. நாடு முழுவதுக்குமான கட்சியின் மிக உயர்ந்த அமைப்பு கட்சியின் அகில இந்திய மாநாடு ஆகும்.
    அ) சாதாரணமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முறையான கட்சியின் அகில இந்திய மாநாடு மத்தியக் குழுவால் கூட்டப்படவேண்டும்.
    ஆ) மத்தியக்குழு தனது சொந்த தேவையின் பேரிலோ அல்லது கட்சியின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்குக்கு குறையாத உறுப்பினர் எண்ணிக்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநில கட்சி அமைப்புகள் கோரினாலோ கட்சியின் அகில இந்திய சிறப்பு மாநாடு மத்தியக் குழுவால் கூட்டப்படும்.
    இ) அதற்கென பிரத்யேகமாக கூட்டப்படும் ஒரு மத்தியக் குழு கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய மாநாடு அல்லது கட்சியின் அகில இந்திய சிறப்பு மாநாடு நடைபெறும் தேதிகள் இடம்பற்றி முடிவு செய்யப்படும்.
    ஈ) மாநில மாநாடுகளாலும் அதே மாதிரி அகில இந்திய கட்சித் தலைமையின் நேரடிப் பார்வையின் கீழுள்ள கட்சி யூனிட்டுகளின் மாநாடுகளாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அடங்கியதாக முறைப்படி நடைபெற வேண்டிய கட்சியின் அகில இந்திய மாநாடு இருக்கும்.
    உ) முறையான ஒரு அகில இந்திய மாநாட்டின் பிரதிநிதித்துவ அடிப்படையையும் அகில இந்திய சிறப்பு மாநாட்டிற்கு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான முறையையும் மத்தியக் குழு தீர்மானிக்கும். அந்தந்த மாநிலங்களில் கட்சியின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை கட்சியால் தலைமை தாங்கப்படும் வெகுஜன ஸ்தாபனங்களின் பலம் மற்றும் கட்சியின் பலம் ஆகியவற்றின் அடிப்படையில் இவற்றை மத்தியக் குழு தீர்மானிக்கும்.
    ஊ) முறையான அகில இந்திய மாநாட்டிலும் அகில இந்திய சிறப்பு மாநாட்டிலும் மத்தியக் குழுவின் உறுப்பினர்கள் முழுப் பிரதிநிதிகளாக பங்கெடுத்துக் கொள்ள உரிமை பெற்றவர்கள் ஆவார்கள்.
  1. முறையான அகில இந்திய மாநாட்டின் அலுவல்களும் அதிகாரமும் கீழ்வருமாறு:
    அ) மத்தியக் குழுவின் அரசியல் ஸ்தாபன அறிக்கையை விவாதித்து அதனடிப்படையில் நடவடிக்கை எடுப்பது.
    ஆ) கட்சியின் வேலை திட்டத்தையும், கட்சியின் அமைப்புச் சட்டத்தையும் திருத்துவது மாற்றுவது.
    இ) அன்றுள்ள நிலைமையில் கட்சியின் கொள்கைகளை நிர்ணயிப்பது.
    ஈ) ரகசிய வாக்கெடுப்பின் மூலம் மத்தியக் குழுவை தேர்ந்தெடுப்பது.
  1. ஒரு தகுதி ஆய்வுக் குழுவைத் தேர்ந்தெடுப்பது. இக்குழு பிரதிநிதிகள் அனைவரின் தகுதிகள் குறித்தும் ஆய்வு செய்து, அகில இந்திய மாநாட்டிற்கு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கும்.
  2. அகில இந்திய மாநாட்டின் நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுப்பதற்கு ஒரு தலமைக்குழுவை அகில இந்திய மாநாடு தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.

பிரிவு-15

மத்தியக் குழு

  1. அ) மத்தியக் குழு, அகில இந்திய மாநாட்டால் தேர்ந்தெடுக்கப்படும் அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கையை கட்சி மாநாடு நிர்ணயிக்கும்.
    ஆ) பதவிக்காலம் முடிந்து செல்லும் மத்தியக் குழு புதிய மத்தியக் குழுவுக்கான வேட்பாளர்களின் பட்டியலை முன்மொழியும்.
    இ) மார்க்சிசம்-லெனினிசத்தில் தேர்ச்சி பெற்றுள்ளதும், தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர கண்ணோட்டத்தில் உறுதி கொண்டுள்ளதும், மக்களுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளதுமான ஒரு ஆற்றல் மிக்க தலைமையை உருவாக்கும் நோக்கத்துடன் மத்திய குழுவுக்கான வேட்பாளர்களின் பட்டியல் தயாரிக்கப்படும்.
    ஈ) முன்மொழியப்பட்ட பட்டியலில் உள்ள எந்த ஒரு பெயரையும் குறித்து எந்த ஒரு பிரதிநிதியும் ஆட்சேபணை எழுப்பலாம். அத்துடன் எந்த ஒரு புதுப் பெயரை அல்லது புதுப் பெயர்களை முன்மொழியலாம். ஆனால் அவ்வாறு முன்மொழியப்படும் உறுப்பினரின் சம்மதம் முன்கூட்டியே பெற்றிருப்பது அவசியமாகும்.
    உ) முன்மொழியப்பட்ட எந்தவொரு வேட்பாளருக்கும் தன்பெயரை திரும்பப் பெற்றுக்கொள்ள உரிமையுண்டு.
    ஊ) மத்தியக் குழுவால் முன் வைக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலும் அத்துடன் பிரதிநிதிகளால் முன்மொழியப்படும் வேட்பாளர்களின் பெயர்களும் சேர்ந்து ரகசிய வாக்கெடுப்பின் மூலம் ஒற்றை மாற்று வாக்குமுறையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு தேர்வு நடைபெறும். பிரதிநிதிகளால் முன்மொழியப்படும் வேட்பாளர்கள் எவரும் இல்லாவிட்டால் கைகளை உயர்த்திக் காட்டுவதன் மூலம் பிரதிநிதிகளின் ஒப்புதல் பெறப்படும்.
  1. கட்சியின் இரண்டு அகில இந்திய மாநாடுகளுக்கு இடையில் மத்தியக் குழுவே கட்சியின் மிகவும் உயர்ந்த அதிகாரம் படைத்த அமைப்பாகும்.
  2. அகில இந்திய மாநாடு நிறைவேற்றியுள்ள அரசியல் கொள்கை முடிவுகள் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கும் கட்சியின் அமைப்புச் சட்டத்தை அமல்படுத்துவதற்கும் மத்தியக் குழு பொறுப்பாகும்.
  3. கட்சி முழுவதன் பிரதிநிதியாக மத்தியக் குழு செயல்படும். கட்சியின் வேலை முழுவதையும் இயக்கி நடத்துவதற்கு மத்தியக் குழு பொறுப்பாக இருக்கும். கட்சியின் முன்னால் எழும் எந்தவொரு பிரச்சனை குறித்தும் முழு அதிகாரத்துடன் முடிவுகள் எடுக்கும் உரிமை மத்தியக் குழுவுக்கு உண்டு.
  4. தன் உறுப்பினர்களிலிருந்து பொதுச்செயலாளர் உட்பட ஒரு அரசியல் தலைமைக்குழுவை மத்தியக்குழு தேர்ந்தெடுக்கும். அரசியல் தலைமைக்குழுவில் எத்தனை உறுப்பினர்கள் இருக்க வேண்டும். என்பதை மத்தியக் குழு தீர்மானிக்கும். மத்தியக் குழுவின் இரண்டு கூட்டங்களுக்கு இடையில் மத்தியக் குழுவின் வேலையை அரசியல் தலைமைக்குழு நடத்திச் செல்லும். மத்தியக் குழுவின் இரண்டு கூட்டங்களுக்கு இடையில் அரசியல் மற்றும் ஸ்தாபன முடிவுகளை மேற்கொள்ள அரசியல் தலைமைக்குழுவுக்கு உரிமையுண்டு.
    அ) மத்தியக் குழு தனது உறுப்பினர்களிலிருந்து ஒரு செயற்குழுவை தேர்ந்தெடுக்கும். செயற்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை மத்தியக் குழுவால் முடிவு செய்யப்படும். இந்த செயற்குழு அரசியல் தலைமைக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் கட்சி மையத்தின் அன்றாட வேலைகளைக் கவனித்து வரும் மற்றும் மத்தியக் குழுவின் முடிவுகளை அமல் நடத்துவதில் அரசியல் தலைமைக்குழுவிற்கு உதவி செய்யும்.
  1. மாநிலக் குழுக்களின் செயலாளர்கள் தேர்வுக்கும், மாநில கட்சிப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் தேர்வுக்கும், மத்தியக் குழுவின் அங்கீகாரம் தேவைப்படும்.
    அ) கட்டுப்பாட்டை அப்பட்டமாக மீறுதல், கெட்ட நடத்தை கட்சி விரோத நடவடிக்கை ஆகியவற்றிற்காக மத்தியக் குழுவின் எந்த ஒரு உறுப்பினரையும் மத்தியக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மூன்றில் இரு பங்கினர் வாக்களித்தால், அவரை மத்தியக் குழுவிலிருந்து நீக்கிவிட வேண்டும். எந்த நிலைமையிலும் தவறு செய்யும் மத்தியக் குழு உறுப்பினரை நீக்குவதற்கான வாக்கெடுப்பின்போது மத்தியக் குழு உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் பாதிக்கும் அதிகமான உறுப்பினர்கள் வாக்களித்திருக்க வேண்டும்.
    ஆ) மத்தியக் குழுவில் ஏற்படும் எந்த ஒரு காலி இடத்தையும் அதன் மொத்த உறுப்பினர்களின் சாதாரண பெரும்பான்மை முடிவின்படி பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
    இ) மத்தியக் குழுவின் ஒரு உறுப்பினரோ அல்லது பல உறுப்பினர்களோ கைது செய்யப்படும் பட்சத்தில் மீதமிருக்கும் மத்தியக் குழு உறுப்பினர்கள் பதிலி உறுப்பினர் அல்லது பதிலி உறுப்பினர்களை இணைத்துக் கொள்ள முடியும். பதிலி உறுப்பினர்களுக்கு அசல் உறுப்பினர்களுக்கு உள்ளதுபோல் முழு உரிமையும் உண்டு. ஆனால் கைது செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் விடுதலையாகி தங்கள் பொறுப்புகளை ஏற்றவுடனேயே இவர்கள் தங்கள் பொறுப்புகளை விட்டுவிட வேண்டும்.
  1. மத்தியக் குழுவின் இரண்டு கூட்டங்களுக்கு இடையே உள்ள காலம் சாதாரணமாக மூன்று மாதங்களுக்கு மேல் போகக்கூடாது. அத்துடன் அதனுடைய மொத்த உறுப்பினர்களில் மூன்றிலொரு பங்கினர் கோரும் போதெல்லாம் மத்தியக் குழு கூட வேண்டும்.
  2. அரசியல் மற்றும் ஸ்தாபனப் பிரச்சனைகளையும் அத்துடன் வெகுஜன இயக்கத்தின் பிரச்சனைகளையும் மத்தியக் குழு விவாதித்து முடிவெடுக்கும். அத்துடன் மாநிலக் குழுக்களுக்கும் வெகுஜன ஸ்தாபனங்களில் உள்ள அகில இந்திய கட்சி பிராக்ஷன்களுக்கும் வழிகாட்டும்.
  3. கட்சியின் நிதிகளுக்கு மத்தியக் குழு பொறுப்பாகும். ஆண்டுக்கு ஒரு முறை அரசியல் தலைமைக்குழுவினால் சமர்ப்பிக்கப்படும் வரவு-செலவு கணக்குகளை மத்தியக் குழு அங்கீகரிக்கும்.

விதிகள்

  1. மத்தியக் குழு தனது சொத்துக்களை நிர்வகிக்க ஒரு டிரஸ்ட் ஏற்படுத்துவதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
  2. கட்சியின் மத்திய அமைப்பை நடத்திச் செல்வதற்கு தேவையான கட்சி நிதி அல்லது விசேஷ கட்சி நிதியாக ஒவ்வொரு ஆண்டும் அல்லது தேவைப்படும்போது ஒவ்வொரு மாநிலக்குழுவும் எவ்வளவு தொகை தரவேண்டும் என்பதை மத்தியக் குழு தீர்மானிக்கும்.
  3. அரசியல் தலைமைக்குழு ஒரு நிதி உபகுழுவை நிறுவும். அது சந்தித்து பின்வரும் பணிகளைச் செய்யும்.
    அ) நிதி சம்பந்தமான பிரச்சனைகள் குறித்தும் ரூ.10,000 வரை ஆகும் செலவினங்கள் குறித்தும் முடிவு செய்யும். அதற்கு மேலான தொகை செலவு செய்ய வேண்டியிருக்கும் பட்சத்தில் அது அரசியல் தலைமைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பும்.
    ஆ) மத்தியக் குழு மற்றும் அதன் நிர்வாக செலவு சம்பந்தமான காலாண்டு வரவு-செலவு கணக்கினை அரசியல் தலைமைக்குழுவிற்கு நிதி உபகுழு சமர்ப்பிக்கும்.
    இ) நிதி உபகுழு அரசியல் தலைமைக்குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டுக் கணக்கினை மத்தியக் குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கும் (கட்சி அமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளபடி)
    ஈ) உப குழுவின் ஒரு உறுப்பினர் கட்சி நிதியின் வரவு மற்றும் செலவுகளுக்கு (சிட்டாவிற்கு) பொறுப்பாக இருப்பார். அதன் பின்னர் கணக்கை முடிக்கவும் தொகுக்கவும் கணக்கு பொறுப்பாளரிடம் ஒப்படைக்கப்படும்.
    உ) கட்சி பத்திரிகை மற்றும் இதர அமைப்புகளின் (ஏதாவது இருப்பின்) அரையாண்டு கணக்குகள் உபகுழுவிற்கு அளிக்கப்பட வேண்டும்.
  1. எப்பொழுதெல்லாம் அகில இந்திய மாநாடு கூட்டப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அகில இந்திய மாநாடு தன்னுடைய அரசியல் ஸ்தாபன அறிக்கையை மத்தியக் குழுவுக்கு அளிக்கும்.
  2. கட்சியின் புரட்சிகரத் தலைமையைப் பலப்படுத்தும் நோக்கத்துடனும், மாநில மற்றும் மாவட்ட அமைப்புகளின் மீது ஒரு தணிக்கையை உறுதிப்படுத்துவதற்காகவும் மத்தியக்குழு பிரதிநிதிகளையும் அமைப்பாளர்களையும் அனுப்புகிறது. மத்தியக் குழு அல்லது அரசியல் தலைமைக்குழு ஒவ்வொரு தடவையும் வகுத்துக் கொடுக்கிற பிரத்தியேகக் கட்டளைகளின் அடிப்படையில் இந்த பிரதிநிதிகளும் அமைப்பாளர்களும் வேலை செய்ய வேண்டும்.
  3. தான் அவசியமென்று கருதுகிறபொழுது மத்தியக் குழுவின் விரிவுபடுத்தப்பட்டதொரு கூட்டத்தையோ அல்லது பிளீனத்தையோ அல்லது மாநாட்டையோ மத்தியக்குழு கூட்டலாம். இத்தகைய கூட்டங்களுக்கு வருகை தரவேண்டியவர்களின் எண்ணிக்கை அடிப்படை இன்னது என்பதையும் பிரதிநிதிகள் தேர்வுக்கான முறை இன்னது என்பதையும் மத்தியக் குழு தீர்மானிக்கும்.
  4. அவசரநிலை ஏற்படுமாயின் அல்லது பெருமளவில் கைதுகள் ஏற்படுமாயின் மத்தியக்குழு, மாநிலக் குழுக்கள், மாவட்டக் குழுக்கள் ஆகியவை சிறிய அடக்கமான அமைப்புகளாகப் புனரமைக்கப்படும். அம்மாதிரியாகப் புனரமைக்கப்படும் மத்தியக் குழுவில் எந்தெந்தப் பெயர்கள் இருக்க வேண்டும் என்பதை வெளியேயுள்ள ஏனைய அரசியல் தலைமைக்குழு உறப்பினர்கள் தயாரிப்பார்கள். அந்தப் பெயர்கள் உள்ளேயும் வெளியேயும் உள்ள மத்தியக் குழு உறுப்பினர்ளால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இம்மாதிரி புனரமைக்கப்படும் மாநில, மாவட்டக் குழுக்களில் எந்தெந்தப் பெயர்கள் இருக்க வேண்டும் என்பதை அந்தந்த குழுக்களின் வெளியேயுள்ள உறுப்பினர்கள் தயாரிப்பாளர்கள். அந்தந்தப் பெயர்கள் அடுத்த மேல் குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும். தாங்கள் அவசியம் என்று கருதுகிறவகையில் இந்தக் குழுக்கள் உப குழுக்களை அமைத்துக் கொள்ள முடியும். கட்சி ஸ்தாபனத்தை பாதுகாப்பதற்காக புதிய விதிகளை வகுத்துக் கொள்வதற்கு புனரமைக்கப்பட்ட மத்தியக் குழுவுக்கு அதிகாரம் உண்டு. ஆனால் சகஜநிலை ஏற்பட்டதும் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்கள் மீண்டும் செயல்படும்.
  5. எந்த ஒரு நபரும் மூன்று முழு முறைகளுக்கு (குரடட கூநசஅ) மேல் பொதுச்செயலாளர் பதவி வகிக்க முடியாது. முழு முறை (குரடட கூநசஅ) என்பது இரண்டு மாநாடுகளுக்கு இடைப்பட்ட காலமாகும். விசேஷமான சூழலில், மூன்று முறை பொதுச்செயலாளராக இருந்த ஒருவர், மத்தியக்குழுவின் 4ல் 3 பங்கு பெரும்பான்மையினரால் முடிவு செய்யப்பட்டால், நான்காவது முறை தேர்ந்தெடுக்கப்படலாம். இருப்பினும் நான்கு முறைக்கு மேல் அந்த நபர் எக்காரணம் கொண்டும் அடுத்த முறை தேர்ந்தெடுக்கப்படக்கூடாது.

பிரிவு-16

மாநில – மாவட்ட அமைப்புகள்

  1. மாநிலம் அல்லது மாவட்டத்தில் மிக உயரிய அமைப்பு மாநில அல்லது மாவட்ட மாநாடு ஆகும். இம்மாநாடு மாநில அல்லது மாவட்டக் குழுவைத் தேர்ந்தெடுக்கும்.
  2. அ) மாநில மாவட்டக் கட்சி ஸ்தாபனங்களின் ஸ்தாபன கட்டமைப்பு, உரிமைகள் மற்றும் செயல்பாடுகள் ஆகியவை அகில இந்திய மட்டத்தில் கட்சியின் கட்டமைப்பு செயல்பாடுகள் ஆகியவை பற்றிய பிரிவுகளில் கூறப்பட்டுள்ளவை போன்றவையே. அவற்றின் செயல்பாடுகள் மாநிலம் அல்லது மாவட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் என்ற வரம்புக்கு உட்பட்டதாகும். அவற்றின் முடிவுகள் அடுத்த மேல்மட்ட கட்சி ஸ்தாபனத்தின் முடிவுகளின் வரையறைக்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும். இந்தக் கட்சிக் குழுக்களின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பது அவசியம் என்று ஏற்பட்டால் அடுத்த மேல் குழுவின் அனுமதியோடு அவர்கள் அதைச் செய்யலாம்.
    ஆ) மாநில அல்லது மாவட்டக் குழு செயலாளர் உட்பட ஒரு செயற்குழுவைத் தேர்ந்தெடுக்கும். ஆனால் அடுத்த மேல் குழுவால் அனுமதிக்கப்பட்டால் ஒரு மாநில அல்லது மாவட்டக் குழு செயற்குழுவின்றி இருக்கலாம்.
    இ) அப்பட்டமாகக் கட்டுப்பாட்டை மீறியதற்காகவோ கெட்ட நடத்தைக்காகவோ அல்லது கட்சி எதிர்ப்பு நடவடிக்கைக்காகவோ தன்னுடைய உறுப்பினர் ஒருவரை மாநில அல்லது மாவட்டக் குழு தன் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையினரின் ஒரு முடிவுப்படி குழுவிலிருந்து நீக்கும்.
  1. அ) இயக்கத்தின் தேவைகளை கணக்கிலெடுத்துக் கொண்டு மாவட்டக் குழுவின் பிரதேச வரம்பு குறித்து மாநிலக் குழு முடிவு செய்யும். அந்த வரம்பு அரசாங்கத்தின் நிர்வாகப் பிரிவுக்குள் அடங்கி இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.
    ஆ) ஆரம்ப யூனிட் அதாவது கட்சி கிளைக்கும், மாவட்டம் அல்லது பிராந்தியம் ஆகியவற்றிற்குமிடையில் அமைக்கப்பட வேண்டிய பல்வேறு கட்சி அமைப்புகள் குறித்து மாநிலக் குழு முடிவு செய்யும். இந்த பல்வேறு அமைப்புகளின் சேர்மானம், வேலை முறை குறித்து தேவையான விதிமுறைகளை மாநிலக் குழு இயற்றும். மத்தியக் குழுவால் வகுக்கப்பட்டுள்ள விதிகளுக்கேற்ப இது இயற்றப்படும்.
  1. எந்த ஒரு நபரும் மாநில / மாவட்ட / இடைக்குழு செயலாளராக மூன்று முழு முறைகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாது. முழுமுறை என்பது சம்பந்தப்பட்ட கமிட்டிகளின் இரண்டு மாநாடுகளுக்கு இடைப்பட்ட காலமாகும். விசேஷமான சூழலில் மூன்று முறை செயலாளராக இருந்த ஒருவர், சம்பந்தப்பட்ட கமிட்டியின் நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மையினரால் முடிவு செய்யப்பட்டால், மாநிலக்குழுவின் ஒப்புதலுடன் நான்காவது முறை தேர்ந்தெடுக்கப்படலாம்.

மாநிலச்செயலாளர் விஷயத்தில் மத்தியக்குழுவின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஆனால் நான்கு முறைக்கு மேல் அந்த நபர் எக்காரணம் கொண்டும் அடுத்தமுறை தேர்ந்தெடுக்கப்படக் கூடாது.

விதிகள்

அடிப்படை கிளைக்கும் மாவட்ட அல்லது பிரதேச குழுக்களுக்கும் இடையில் இடைக்குழுக்களை கீழ்க்கண்ட விதிகளின் கீழ் ஏற்படுத்த மாநிலக் குழுக்களால் முடிவு செய்யமுடியும்.

  1. அ) அமைக்கப்படவுள்ள குழுக்களின் அளவு பற்றி மாநிலக்குழு தீர்மானிக்கும்.
    ஆ) அத்தகைய குழு அந்த மட்டத்தில் மாநாட்டுப் பிரதி நிதிகளால் தேர்ந்தெடுக்கப்படும். அந்தக்குழு செயலாளரைத் தேர்ந்தெடுக்கும். செயற்குழுவையும் தேர்ந்தெடுக்கும்.
    இ) இடைக்குழு மாநாடுகளுக்கு எத்தனை பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதை மாநிலக்குழு முடிவு செய்யும்.
    ஈ) இந்த இடைக்குழு (ஸ்தல பிரதேச மண்டலக் குழுக்கள்) மாநில, மாவட்ட குழுக்கள் மேற்கொள்ளும் அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளும். அதன் நடவடிக்கைகள் அதன் அதிகார வரம்புக்குட்பட்ட ஸ்தல பிரதேச மண்டல எல்லைக்குள் இருக்கும்.
    உ) ஒருங்கிணைப்பதற்காக அமைக்கப்பட்ட விசேஷ குழுக்கள் நியமன அடிப்படையிலான குழுக்களுக்கு முழுமையாக தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களுக்குள்ள பொதுவான அதிகாரங்கள் கிடையாது. அதை நியமித்த சம்பந்தப்பட்ட குழு முடிவுகளின் வழிகாட்டுதலுக்கேற்ப இந்தக் குழுவின் வேலைகள் நிர்ணயிக்கப்படும்.
    ஊ) மாவட்ட மாநாடுகளிலும், மாவட்டக் குழுவுக்கு கீழ் உள்ள குழுக்களின் மாநாடுகளிலும் கலந்து கொள்ள வேண்டிய பிரதிநிதிகளின் எண்ணிக்கையை மாநிலக்குழு முடிவு செய்யும்.

மத்தியக் குழுவுக்கு கீழ் உள்ள மாநில மற்றும் மாவட்ட கட்சி அமைப்புகள் குழுக்களுக்கு கட்சி நிதி மற்றும் கணக்கு பற்றிய விதிகள் விளக்கம்.

  1. மத்தியக் குழுவின் (சி.சி.) நிதி மற்றும் கணக்கிற்கு விதி உருவாக்கியுள்ளது போல் கீழ்க்கண்ட விதிகள் சி.சி.க்கு கீழ் உள்ள அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களுக்கும் பொருந்தும்.
    அ) மாநில அளவில் மாநில செயற்குழுவால் மாநிலக் குழுவின் நிதி உபகுழு அமைக்கப்படும். (மாநிலக்குழு தீர்மானிக்கிற இடைக்குழு, மாவட்டக் குழுக்களுக்கும் இது பொருந்தும்)
    ஆ) செயற்குழு மேற்பார்வையின் கீழ் இந்த உபகுழு பண விநியோகத்திற்கும், கணக்கு நிர்வகிப்பதற்கும் பொறுப்பேற்கும்.
    இ) இந்த உபகுழு அரையாண்டிற்கு ஒருமுறை கட்சி குழுவுக்கு கணக்கு சமர்ப்பிக்கும். இந்த அறிக்கை அடுத்தமேல் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
    ஈ) ஆண்டு கணக்குகள் உபகுழுவால் தணிக்கை செய்யப்பட்டு கட்சிக் குழுவின் ஒப்புதலுக்காக வைக்கப்பட வேண்டும்.
    உ) மாவட்டக்குழுக்கள் அதனுடைய வரவு செலவு கணக்கையும், அம்மாவட்டக்குழுவின் கீழ் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கீழ்க்கமிட்டிகளின் வரவுசெலவு கணக்கையும் தொகுத்து உரிமை கணக்காயர்களால் தணிக்கை செய்யப்பட்ட கணக்கை ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 31ம் தேதிக்குள் மாநிலக்குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
    ஊ) மாநிலக்குழுக்கள் அதனுடைய வரவு செலவு கணக்கையும், அதற்கு கீழ் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கமிட்டிகளின் கணக்கையும் தொகுத்து உரிமை கணக்காயர்களால் தணிக்கை செய்யப்பட்ட கணக்கை ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட்டு 31-ம் தேதிக்குள் மத்தியக்குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பிரிவு-17

ஆரம்ப யூனிட்

  1. அ) தொழிலையோ அல்லது பிராந்தியத்தையோ அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள கட்சிக்கிளையே கட்சியின் ஆரம்ப யூனிட் ஆகும்.
    ஆ) ஒரு தொழிற்சாலையிலோ, ஒரு நிறுவனத்திலோ அல்லது ஏதாவது ஒரு தொழிலிலோ வேலை செய்கிற கட்சி உறுப்பினர்கள், அவர்களது உத்தியோகம் அல்லது தொழில் அடிப்படையில் கட்சி அமைப்பிற்குள் கொண்டுவரப்படுவார்கள். அம்மாதிரிக் கிளைகள் உருவாக்கப்படும் இடங்களில் மேற்படி கிளையைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவர்கள் வசிக்கும் பிராந்தியங்களில் இயங்கும் கட்சிக் கிளையின் இணைப்பு உறுப்பினர்களாக இருப்பார்கள். அல்லது அங்கு துணைக் கிளைகளாக அமைக்கப்படுவார்கள். அவர்களது தொழிற்சாலையிலோ, நிறுவனத்திலோ, வேலையிடத்திலோ அவர்களின் அடிப்படை யூனிட்டுகள் அவர்களுக்கு கொடுத்துள்ள வேலைகளுக்கு தீங்கு ஏற்படாத முறையில் அவர்கள் வசிக்கும் இடங்களில் அவர்களுக்கு கட்சி வேலை கொடுக்கப்பட வேண்டும்.
    இ) ஒரு கிளையின் உறுப்பினர் எண்ணிக்கை பதினைந்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது. கிளையின் பணிகளும், கிளை சம்பந்தமான இதர பிரச்சனைகளும் மாநிலக் குழுவால் தீர்மானிக்கப்படும்.
  1. தன்னுடைய பிரதேசம் அல்லது தொழில்துறைக்குள் வசிக்கும் தொழிலாளி மக்கள், விவசாயி மக்கள், மக்களின் இதரப் பகுதி ஆகியோருக்கும் கட்சியின் தலைமை தாங்கும் குழுவுக்குமிடையே உயிருள்ள இணைப்பாக கிளை விளங்குகிறது. அதனுடைய பணிகள் பின்வருமாறு:
    அ) மேல் குழுவின் கட்டளைகளை நிறைவேற்றுதல்.
    ஆ) தான் வேலை செய்யும் தொழிற்சாலை அல்லது ஸ்தலத்தில் உள்ள மக்களை கட்சியின் அரசியல் ஸ்தாபன முடிவுகளுக்கு வென்றெடுப்பது.
    இ) போர்க்குணமுள்ளவர்களையும், அனுதாபிகளையும் நடவடிக்கையில் ஈடுபடுத்துவது, அவர்களைப் புதிய உறுப்பினர்களாக சேர்ப்பது, அவர்களுக்கு அரசியல் பயிற்சி அளிப்பது.
    ஈ) மாவட்ட ஸ்தல அல்லது நகரகுழுக் குழுக்களுக்கு அவற்றின் அன்றாட ஸ்தாபன ரீதியாக மற்றும் கிளர்ச்சிப் பிரச்சார வேலைகளில் உதவி செய்வது.
  1. அன்றாட வேலையை நிறைவேற்றுவதற்கு கிளை தன்னுடைய செயலாளரைத் தேர்ந்தெடுக்கிறது. செயலாளரை அடுத்த மேல் குழு உறுதி செய்ய வேண்டும்.

பிரிவு-18

மத்திய – மாநில கட்டுப்பாட்டு குழு (கண்ட்ரோல் கமிஷன்)

  1. கட்சியின் அகில இந்திய மாநாடு ஐந்து உறுப்பினர்களுக்கும் மேற்படாத விதத்தில் ஒரு மத்திய கண்ட்ரோல் கமிஷனை நேரடியாகத் தேர்ந்தெடுக்கும். மத்திய கண்ட்ரோல் கமிஷனின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் அப்பதவியின் பொருட்டு மத்திய குழுவின் உறுப்பினராக இருப்பார்.
  2. கண்ட்ரோல் கமிஷன் பின்வரும் விஷயங்களைக் கவனிக்கும்.
    அ) மத்திய குழு அல்லது தலைமைக்குழு அதற்கு அனுப்பும் ஒழுங்கு நடவடிக்கை சம்பந்தப்பட்ட வழக்குகள்.
    ஆ) மாநிலக்குழுவால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளவர்களின் மேல்முறையீட்டு வழக்குகள்.
    இ) வெளியேற்றப்பட்டது குறித்த வழக்குகளில் மாநிலக்குழுவிற்கோ அல்லது மாநில கண்ட்ரோல் கமிஷனுக்கோ மேல்முறையீடு செய்து நிராகரிக்கப்பட்ட வழக்குகள்.
  1. மத்திய கண்ட்ரோல் கமிஷன் முடிவே இறுதியானதாகவும் கட்டுப்படுத்தக்கூடியதாகவும் இருக்கும். விதிவிலக்கான நேர்வுகளில் மத்திய கண்ட்ரோல் கமிஷன் முடிவுகளை, மத்தியக்குழு நிறுத்தி வைக்கவும், மாற்றம் செய்யவும், அல்லது அம்முடிவினை திரும்பப்பெறவும் செய்யலாம். அப்படிப்பட்ட முடிவானது பங்கேற்ற உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும். அப்படிப்பட்ட எல்லா முடிவுகளும் அடுத்த அகில இந்திய மாநாட்டில் முன்வைக்கப்பட வேண்டும்.
  2. கட்சியின் மத்தியக் குழு கண்ட்ரோல் கமிஷனுடன் ஆலோசித்தபின் கண்ட்ரோல் கமிஷனில் விரிவான செயல்பாட்டு விதிகளை உருவாக்கும்.
  3. இரண்டு கட்சிக் காங்கிரஸ்களுக்கிடையில் மத்திய கண்ட்ரோல் கமிஷனில் காலி இடம் ஏற்பட்டால் அதை நிரப்பும் உரிமை மத்திய குழுவுக்கு உண்டு.
  4. மாநில மாநாடானது ஒழுங்கு நடவடிக்கை சம்பந்தமான வழக்குகளை விசாரிக்க ஒரு மாநில கண்ட்ரோல் கமிஷனை தேர்ந்தெடுக்கலாம். எந்தெந்த மாநிலங்களில் மாநில கண்ட்ரோல் கமிஷன் உருவாக்கப்பட்டுள்ளதோ அந்த மாநிலத்திற்குள் மட்டும் மாநில கண்ட்ரோல் கமிஷனின் செயல்பாடும், அதிகாரமும் மத்திய கண்ட்ரோல் கமிஷனுடையதைப் போன்றிருக்கும்.

விதிகள்

மத்திய கட்டுப்பாட்டுக்குழு செயல்பாடு சம்பந்தமான விதிகள்:

  1. பிரிவு 18ன் கீழ் வரும் மேல் முறையீட்டையோ அல்லது ஆலோசனை கேட்டுவரும் குறிப்பினையோ மத்திய கட்டுப்பாட்டு குழு பெற்றதும் அதைப் பற்றி விசாரித்து முடிவெடுக்கும்.
  2. பாதிக்கப்பட்ட கட்சி உறுப்பினர் தவிர வேறுயாரும் மேல்முறையீடு செய்ய முடியாது.
  3. உண்மைகளை அறிந்து ஒரு முடிவிற்குவர சம்பந்தப்பட்ட கிளை-கிளைகள் அல்லது நபர்களுடன் நேரடியாகக் கடிதப் போக்குவரத்து செய்யவும் விசாரணைகள் செய்யவும் மத்தியக் கட்டுப்பாட்டு குழுவிற்கு உரிமையுண்டு.
  4. மத்திய கட்டுப்பாட்டுக்குழு சாதாரணமாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடும். 14 நாட்கள் முன்னறிவிப்பு கொடுத்து குழுத்தலைவர் மத்திய கட்டுப்பாட்டுக்குழுவின் கூட்டத்தை கூட்ட வேண்டும்.
  5. குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை எண்ணிக்கையே குறை நிறை எண்ணாகும். (கோரம்) கூட்டப்பட்ட குழுவின் கருத்து ஏகமனதாகவோ அல்லது குழுவின் மொத்த உறுப்பினர்களில் பெருமைபான்மையினரின் கருத்தாகவோ இருந்தால்தான் மத்திய கட்டுப்பாட்டுக்குழு ஒரு முடிவெடுக்கலாம். இவ்வாறு எடுக்கப்பட்ட முடிவை கூட்டத்திற்கு வராத உறுப்பினர்/ உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
  6. சிக்கலில்லாத தனித்த விஷயங்களில் கடிதப் போக்குவரத்து மூலமாகவோ உறுப்பினர்களின் கருத்துக்களைத் தெரிந்து கொண்டு மத்தியக் கட்டுப்பாட்டுக்குழு முடிவெடுக்கலாம்.
  7. எடுக்கப்பட்ட முடிவை மேல்முறையீடு செய்தவருக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலக்குழுவிற்கும் மத்தியக் கட்டுப்பாட்டு குழு தெரிவிக்க வேண்டும். இந்த முடிவை சம்பந்தப்பட்ட குழுக்கள் உடனடியாக செயலாக்க வேண்டும்.
  8. மத்தியக் கட்டுப்பாட்டுக்குழு தனது நடவடிக்கைகளையும் எடுத்த முடிவுகளையும் தொகுத்து வருடம் ஒரு முறையேனும் மத்தியக்குழுவிற்கு அறிக்கை கொடுக்க வேண்டும்.
  9. மேற்சொல்லப்பட்ட விதிகள் தகுந்த மாறுதல்களுடன் மாநிலக் கட்டுப்பாட்டு குழுக்களுக்கும் பொருந்தும்.

மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு தனது அலுவல்களை நடத்துவதற்கான வழிமுறை விதிகள்.

  1. மேல் முறையீடு வந்ததும் மத்திய கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவர் அந்த வழக்கு பற்றி இதர உறுப்பினர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
  2. குறிப்பிட்ட வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்த எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகளை குழுவின் தலைவர் இதர உறுப்பினர்களுக்குத் தெரிவிப்பார். இதர அங்கத்தினர்கள் தங்களுடைய முன் மொழிவுகளை குழுத் தலைவருக்கு அனுப்பலாம்.
  3. மேல் முறையீடு பற்றி முடிவெடுக்க சம்பந்தப்பட்ட குழுக்களிடமிருந்தும் மற்றும் உறுப்பினர்களிடமிருந்தும் தேவையான விவரங்களைக் கேட்க மத்திய கட்டுப்பாட்டுக் குழுவிற்கு உரிமையுண்டு. இவ்விதம் கேட்கப்படும் விவரங்களை இரண்டு மாதங்களுக்குள் மத்திய கட்டுப்பாட்டுக் குழுவிற்கு தெரிவிக்க வேண்டும். கேட்கப்பட்ட விவரங்கள் இந்த காலவரையறைக்குள் வராவிட்டால் மத்திய கட்டுப்பாட்டுக்குழு இந்த வழக்கை மேற்கொண்டு நடத்தலாம்.

மத்தியக்கமிட்டிக்கான வழிமுறைகள் :

அமைப்புச் சட்டம் பிரிவு 18, உட்பிரிவு (3)-ன் படி விதிவிலக்கான நேர்வுகளில் மத்திய கண்ட்ரோல் கமிஷனின் முடிவுகளை நிறுத்தி வைக்க, மாற்றம் செய்ய அல்லது அம்முடிவினை திரும்பப் பெற மத்தியக்குழு இறுதி முடிவு எடுக்கும் முன்னர் மத்தியக்குழுவானது மத்திய கண்ட்ரோல் கமிஷனை கலந்தாலோசிக்க வேண்டும்.

பிரிவு-19

கட்சிக் கட்டுப்பாடு

  1. கட்சியின் ஐக்கியத்தை கட்டிக்காக்கவும் உறுதிப்படுத்தவும், அதன் பலத்தையும் போர்த்திறனையும் செல்வாக்கையும் அதிகப்படுத்தவும், ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடுகளை செயலாக்கவும் கட்டுப்பாடு இன்றியமையாததாகும். கட்சிக் கட்டுப்பாட்டை உறுதியாகக் கடைப்பிடித்தாலன்றி கட்சியானது மக்களைப் போராட்டங்களிலும், இயக்கங்களிலும் தலைமைதாங்கி நடத்திச் செல்லவோ, அவர்கள் பால் தனது கடமைகளை நிறைவேற்றவோ முடியாமல் போய்விடும்.
  2. கட்சியின் இலட்சியங்கள், வேலைத்திட்டம், கொள்கைகள் ஆகியவற்றை உணர்வுப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளுதல் என்ற அடிப்படையின் மீது கட்டுப்பாடு அமைந்திருக்கிறது. கட்சி ஸ்தாபனத்திலோ, பொதுவாழ்விலோ ஒருவருக்கு இருக்கும் அந்தஸ்து எதுவாக இருந்த போதிலும் கட்சியின் சகல கட்டுப்பாட்டிற்குச் ஆவார்கள். உறுப்பினர்களும் கட்சியின் சமமாக உட்பட்டவர்கள்
  3. கட்சியின் அமைப்புச் சட்டத்தை மீறுதல், கட்சி முடிவுகளை மீறுதல், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் என்ற பொறுப்புக்குத் தகுதியற்ற செயல், நடத்தை முதலியன கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகக் கொள்ளப்படும். அதன் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட ஏதுவாகும்.
  4. ஒழுங்கு நடவடிக்கைகளாவன:
    அ) எச்சரித்தல்
    ஆ) கண்டித்தல் (சென்சூர்)
    இ) பகிரங்கமாகக் கண்டித்தல்
    ஈ) கட்சியில் வகிக்கும் பதவியிலிருந்து நீக்குதல்
    உ) ஒரு ஆண்டிற்கு மேற்படாதவாறு கட்சியின் முழு உறுப்பினர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்தல்.
    ஊ) வெளியேற்றுதல்
  1. சம்பந்தப்பட்ட தோழரைத் திருத்துவதற்கு அவரது தவறை உணரும்படிச் செய்வதற்கு விடாது முயற்சித்தல் என்ற முறைகள் உட்பட இதர முறைகள் பலனற்றுப் போகும் பொழுது, ஒழுங்கு நடவடிக்கை சாதாரணமாக மேற்கொள்ளப்படும். ஆனால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பின்னரும் கூட சம்பந்தப்பட்ட தோழர் தன்னை திருத்திக் கொள்வதற்கும் உதவி செய்ய வேண்டிய முயற்சி நீடிக்க வேண்டும். ஆனால் கட்சி நலன்களையும் அல்லது அதன் செல்வாக்கையும் பாதுகாப்பதற்காக உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற அளவிற்கு கட்டுப்பாடு மீறிய குற்றம் இருக்குமேயானால் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
  2. எல்லா ஒழுங்கு நடவடிக்கைகளையும்விட கட்சியிலிருந்து வெளியேற்றுவதுதான் மிகவும் கடுமையான நடவடிக்கை ஆகும். எனவே, மிகவும் அதிகமான ஜாக்கிரதையுடனும் ஆழ்ந்தாய்வுடனும் தீர்க்கமான முடிவுடனும் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
  3. ஒரு கட்சி உறுப்பினரை வெளியேற்றும் எந்த ஒரு ஒழுங்கு நடவடிக்கையும் அதற்கு அடுத்த மேல் குழுவின் ஊர்ஜிதம் இல்லாமல் அமலுக்கு வராது. ஆனால் மேல் குழு ஊர்ஜிதம் கொடுப்பதற்கு முன் உள்ள இடைக்காலத்தில் வெளியேற்றம் என்ற தண்டனைக்குள்ளான கட்சி உறுப்பினர் கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் அகற்றப்படுவார். அடுத்த மேல் குழுவால் வெளியேற்றம் ஊர்ஜிதப்படுத்தப்படும்வரை வெளியேற்றப்பட்ட உறுப்பினர் கட்சியின் முழு உறுப்பினர் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவராக இருப்பார். மேல் குழு தனது முடிவை 6 மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.
  4. ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் தோழருக்கு அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் குற்றங்கள் மற்றும் இதர தொடர்பான விவரங்கள் ஆகியவை முழுமையாகத் தெரியப்படுத்தப்பட வேண்டும். அவர் உறுப்பினராக உள்ள கட்சி யூனிட்டில் நேரில் அவர் சொல்லுவது கேட்கப்பட வேண்டுமென்ற உரிமை அவருக்குண்டு. அவருக்கு எதிராக கட்சியின் வேறொரு யூனிட் நடவடிக்கை எடுப்பதானால் அந்த யூனிட்டிற்கு தன்னுடைய விளக்கத்தை சமர்ப்பிப்பதற்கும் அவருக்கு உரிமையுண்டு.
  5. ஒரு உறுப்பினர் ஏக காலத்தில் கட்சியின் இரண்டு யூனிட்டுகளில் உறுப்பினராக இருக்கும்பொழுது அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி கீழ்மட்ட யூனிட் சிபாரிசு செய்ய முடியும். ஆனால் அந்த சிபாரிசு அவர் உறுப்பினராகவுள்ள மேல்மட்ட யூனிட் ஏற்றுக் கொண்டாலொழிய அமலுக்கு வராது.
  6. வேலைநிறுத்தத்தை உடைப்பவர்கள், குடிவெறியர்கள், ஒழுக்கங்கெட்டு சீரழிந்தவர்கள். கட்சியின் நம்பிக்கையைக் காட்டிக் கொடுப்பவர்கள். மிகவும் மோசமான பண ஊழல் குற்றம் செய்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்படும் கட்சி உறுப்பினர்கள், குற்றப்பத்திரிகை அளித்து அவர்களது விளக்கம் பெற்று முடிவு செய்யப்படும் வரை அவர்கள் சார்ந்துள்ள கட்சி யூனிட்டால் கட்சி உறுப்பினர் பொறுப்பிலிருந்து உடனடியாக நிறுத்திவைக்கப்படவும், அவர்கள் கட்சியில் வகிக்கும் எல்லா பொறுப்பான பதவிகளிலிருந்தும் உடனடியாக அகற்றப்படவும் முடியும்.

இவ்விதம் உடனடியாக தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு கட்சியின் எல்லா பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படும் காலத்தை மூன்று மாதங்களுக்கு மேல் நீட்டிக்கக்கூடாது.

  1. அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்தும் மேல்முறையீடு செய்ய உரிமையுண்டு.
    அ) ஒரு கட்சிக்கிளை உறுப்பினர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால், அம்முடிவினை சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு முடிவு எடுக்கப்பட்டதிலிருந்து 30 நாட்களுக்குள்ளோ, அல்லது பிரிவு 19 உட்பிரிவு (7)ன் படி மேல்கமிட்டி ஒப்புதல் பெற வேண்டும் என்றிருந்தால், மேல்கமிட்டி உறுதிப்படுத்தியதிலிருந்து 30 நாட்களுக்குள்ளோ தெரியப்படுத்திட வேண்டும்.
    ஆ) ஒழுங்கு நடவடிக்கைகுறித்த தகவல் கிடைத்த ஆறு மாதங்களுக்குள், சம்பந்தப்பட்ட கட்சி உறுப்பினர் ஒழுங்கு நடவடிக்கைக்கு எதிரான மேல்முறையீட்டை செய்திட வேண்டும்.
  1. எந்தவொரு கீழ்க் குழுவாவது, விடாப்பிடியாக கட்சியின் முடிவுகளையும், கொள்கைகளையும் மீறினாலும் கடுமையான கோஷ்டிப் பூசலுக்கு உள்ளாகியிருந்தாலும் அல்லது கட்சிக் கட்டுப்பாட்டை மீறினாலும் அந்தக் கீழ்க் குழுவைக் கலைப்பதற்கும் புதிய குழுவை அமைப்பதற்கும் அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கும் மத்திய மாநில அல்லது மாவட்டக் குழுவுக்கு உரிமை உண்டு. ஆனால் மாநில, மாவட்டக் குழு அது தேவையென கருதும் மேல் நடவடிக்கை எடுத்துக் கொள்வதற்காக எந்த நடவடிக்கை எடுத்திருந்தாலும் அத்தகைய நடவடிக்கையைப் பற்றி அடுத்த மேல் கமிட்டிக்கு உடனடியாக அறிக்கை அனுப்ப வேண்டும்.
  2. விதிவிலக்கான சூழ்நிலைமைகளில் கட்சிக் குழுக்கள் தங்களுடைய உசிதப்படி மிக மோசமானக் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக உறுப்பினர்களைக் கட்சியை விட்டு வெளியேற்றுவதில் அவசர வழிமுறைகளைக் கையாளலாம்.

விதி

விதிவிலக்கான சூழ்நிலையில் ஒருவரை கட்சியை விட்டு உடனடியாக நீக்குவது என்பது மோசமான கட்சி விரோத செயல்களில் உறுப்பினர் ஈடுபடும்போது அவருக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையாகும். இதன் பொருள், ஒரு உறுப்பினர் ஒற்றர் அல்லது எதிரியின் கையாள் அல்லது உறுப்பினரின் நடவடிக்கைகள் கட்சியின் நிலைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற சந்தேகத்திற்கு இடமேற்படுவது போன்ற மிக மோசமான சூழ்நிலைகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பிரிவு-20

பொது ஸ்தாபனங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் கட்சி உறுப்பினர்கள்

  1. நாடாளுமன்றம் சட்டமன்றம் அல்லது நிர்வாகக் கவுன்சில்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் கட்சி உறுப்பினர்கள் தங்களை ஒரு கட்சிக் குழுவாக அமைத்துக் கொண்டு அதற்கான கட்சிக் குழுவின் கீழ் கட்சிக் கொள்கை, திட்டம். தாக்கீதுகள் ஆகியவற்றிலிருந்து சிறிதும் வழுவாது செயல்படவேண்டும்.
  2. கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் நலன்களுக்காக உறுதியுடன் போராட வேண்டும். சட்டமன்றத்தில் அவர்களுடைய பணி, இயக்கத்தை பிரதிபலிக்கும் வகையிலும், கட்சியின் கொள்கைகளை உயர்த்திப்பிடித்து மக்களிடம் பிரபலப்படுத்தும் வகையிலும் அமையவேண்டும்.

கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர்களின் சட்டமன்ற வேலை, வெளியே கட்சியின் வேலைகளோடும் வெகுஜன இயக்கங்களோடும் நெருக்கமாக இணைந்ததாக இருக்க வேண்டும். கட்சி ஸ்தாபனங்களையும் வெகுஜன ஸ்தாபனங்களையும் கட்டி வளர்ப்பதற்கு உதவி செய்வது எல்லா கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர்களின் கடமையாகும்.

  1. தங்களைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களுடனும், மக்களுடனும் முடிந்த அளவு நெருங்கிய தொடர்பை கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வாக்காளர்களுக்கும் மக்களுக்கும் சட்டமன்ற வேலைகளைப் பற்றி அவ்வப்போது தெரியப்படுத்துவதுடன் அவர்களது ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர்கள் பெறவேண்டும்.
  2. சொந்த வாழ்க்கையில் உயர்தரமான தூய்மையும், நேர்மையும் படைத்தவர்களாக கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர்கள் விளங்க வேண்டும் அவர்கள் ஆடம்பரமற்ற வாழ்க்கை நடத்துவதுடன் மக்களுடன் தொடர்பு கொள்ளும்போதும், பழகும்போதும் தன்னடக்கம் உள்ளவர்களாகவும் நடந்து கொள்ள வேண்டும் கட்சியின் நலனுக்கு அவர்கள் சொந்த நலனை உட்பட்டதாக ஆக்க வேண்டும்.
  3. கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர்களும், ஸ்தல ஸ்தாபன உறுப்பினர்களும் பெறுகிற சம்பளங்களும் அலவன்சுகளும் கட்சியின் பணமாகக் கருதப்படுகின்றது. சம்பந்தப்பட்ட கட்சிக் குழு உறுப்பினர்களின் சம்பளத்தையும் அலவன்சுகளையும் நிர்ணயிக்கும்.
  4. கார்ப்பரேஷன்கள், நகரசபைகள், நகர அல்லது பிரதேச குழுக்கள் ஜில்லா பரிஷத்துகள், மண்டல சமிதிகள் கிராமப் பஞ்சாயத்து ஆகியவற்றிற்குத் தேர்ந்தெடுக்கப்படும் கட்சி உறுப்பினர்கள், அதற்கான கட்சிக்குழு கட்சிக் கிளையின் வழிகாட்டுதலின் கீழ் வேலை செய்ய வேண்டும். அவர்கள் தங்களது வாக்காளர்களுடனும் மக்களுடனும் தினந்தோறும் நெருங்கிய தொடர்பு கொள்வதுடன் அந்தந்த ஸ்தாபனங்களில் வாக்காளர்களின், மக்களின் நலன்களைக் காக்க போராட வேண்டும். தங்களது வேலையைப் பற்றி முறையாக தங்கள் வாக்காளர்களுக்கும் மக்களுக்கும் அவர்கள் தெரியப்படுத்துவதுடன் அவர்களது ஆலோசனைகளையும் அறிவுரையையும் பெற வேண்டும். இந்த ஸ்தாபனங்களுக்கு உள்ளே செய்யும் வேலையை வெளியில் வெகுஜன நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுவதோடு இணைக்க வேண்டும்.
  5. நாடாளுமன்றம், சட்டமன்றங்கள், கவுன்சில்கள் மத்திய அரசினால் நிர்வகிக்கப்படும் பிரதேசங்களின் கவுன்சில்கள் ஆகியவற்றின் தேர்தலுக்கான கட்சி வேட்பாளர்களின் எல்லா நியமனங்களும் மத்தியக் குழுவின் அங்கீகாரத்துக்கு உட்பட்டதாகும்.

கார்ப்பரேஷன் நகரக் கடைகள், ஜில்லா போர்டுகள், ஸ்தல ஸ்தாபனங்கள், பஞ்சாயத்துக்கள் ஆகியவற்றிற்கான கட்சி வேட்பாளர்களின் நியமனங்கள் குறித்த விதிகள் மாநிலக் குழுக்களால் வகுக்கப்படும்.

விதிகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் உள்ள கட்சி உறுப்பினர்கள்:

  1. ஒவ்வொரு சிபிஐ(எம்) நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய குழுவால் நிர்ணயிக்கப்பட்ட லெவி தொகையை மத்தியக் குழுவுக்குத்தர வேண்டும்.
  2. மாநிலத்திற்குச்சேர வேண்டிய லெவி பங்கு என அரசியல் தலைமைக் குழு நிர்ணயிக்கும் தொகை ஒவ்வொரு மாதமும் உறுப்பினர் சார்ந்துள்ள சம்பந்தப்பட்ட மாநிலக்குழுவிற்கு அனுப்பப்படும்.

விளக்கம்: அமைப்புச் சட்டத்தின் பிரிவு 20-ன் உட்பிரிவு (5) கூறியதாவது:

கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளாட்சி மன்ற அமைப்புகளின் உறுப்பினர்களும் வாங்கும் சம்பளம் மற்றும் படிகள் கட்சிப் பணமாகவே கருதப்படும். முன்பு நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் தரும் வழக்கம் இல்லை. தற்போது வழங்கப்படுகிறது. எனவே, கீழ்க்கண்ட விதி உருவாக்கப்பட்டுள்ளது.

  1. கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர்களும், ஸ்தல அமைப்புகளின் உறுப்பினர்களும் பெறும் சம்பளம் மற்றும் படிகள் என்பது ஓய்வூதியத்தையும் உள்ளிட்டதாகும்.

பிரிவு-20 (அ)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சட்டப்படி நிலைபெற்றுள்ள இந்திய அரசியல் சாசனத்தின் மீதும் மற்றும் சோஷலிசம் மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய கோட்பாடுகள் மீதும் உண்மையான நம்பிக்கையும் விசுவாசமும் கொண்டுள்ளது. மேலும் இந்தியாவின் சுயாதிபத்தியம் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டையும் உயர்த்திப் பிடிக்கும்.

பிரிவு-21

உள்கட்சி விவாதங்கள்

  1. கட்சியை ஒன்றுபடுத்துவதற்காக கட்சி முழுவதன் பல்வேறு அமைப்புகளில் கட்சிக் கொள்கை பற்றி தடையற்ற காரியார்த்தமான விவாதங்கள் நடைபெறுவது பயனுள்ளதாகவும் அவசியமாகவும் இருக்கின்றன. உள்கட்சி ஜனநாயகத்திலிருந்து தோன்றுகிறதும் கட்சி உறுப்பினர்களின் பிரிக்கப்பட முடியாததொரு உரிமையாகும் இது, ஆனால் கட்சியின் ஒற்றுமையையும் செயல்திறனையும் முடமாக்குகிற வகையில் கட்சிக் கொள்கையின் பிரச்சனைகள் குறித்து முடிவற்ற விவாதங்கள் நடைபெறுவது உள்கட்சி ஜனநாயகத்தை அப்பட்டமானதொரு வகையில் தவறாகப் பயன்படுத்துவதாகும்.
  2. அகில இந்திய ரீதியில் மத்தியக் குழுவால் உள்கட்சி விவாதம் உருவாக்கி நடத்தப்படும்.
    அ) அவசியம் என்று மத்தியக் குழு கருதுகிறபொழுதெல்லாம் இது நடைபெறும்.
    ஆ) எப்பொழுதெல்லாம் கட்சிக் கொள்கையின் ஒரு முக்கிய பிரச்சனையின் மீது மத்தியக் குழுவுக்குள் போதுமான அளவு உறுதியானதொரு பெரும்பான்மை இல்லாதிருக்கிறதோ அப்பொழுதெல்லாம் இது நடைபெறும்.
    இ) கட்சியின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கை பிரதிநிதித்துவப்படுத்துகிற மாநிலக் குழுக்கள் அகில இந்திய ரீதியில் ஒரு உள்கட்சி விவாதம் வேண்டும் என்று கோருகிறபொழுது இது நடைபெறும்.
  1. ஒரு குறிப்பிட்ட மாநிலத்தைப்பொறுத்த கட்சிக் கொள்கையின் ஒரு முக்கிய பிரச்சனையின் மீது அந்த மாநிலக் குழு உள்கட்சி விவாதத்தைத் துவங்கலாம். இவாறு துவங்குவது மாநிலக்குழுவின் சொந்த முடிவின் பேரிலோ அல்லது அந்த மாநிலத்தின் மொத்தக் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற மாவட்டக் குழுக்களின் ஒரு கோரிக்கையின் பேரிலோ இருக்கலாம். இவ்வாறு துவங்குவதற்கு மத்தியக் குழுவின் அங்கீகாரம் வேண்டும்.
  2. உள்கட்சி விவாதம் மத்தியக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட வேண்டும். விவாதத்திலிருக்கும் பிரச்சனைகளை மத்தியக் கமிட்டி வரையறுக்கும் விவாதத்தை வழிநடத்திச் செல்கிற மத்தியக் குழு விவாதம் நடத்தப்பட வேண்டிய வழிமுறையைத் தீர்மானிக்கும்.

மாநிலக் குழு விவாதத்தைத் துவங்கும்பொழுது விவாதத்திலுள்ள பிரச்சனைகளை அது வரையறுக்கும். விவாதம் நடத்தப்பட வேண்டிய வழிமுறையை அது தீர்மானிக்கும். இவ்வாறு மாநிலக் குழு தீர்மானிப்பதை மத்தியக் குழுவின் அங்கீகாரத்துடன் செய்ய வேண்டும்.

பிரிவு-22

கட்சியின் அகில இந்திய மாநாடு (காங்கிரஸ்) மற்றும் மாநாடுகளுக்கு முன் தயாரிப்பு விவாதங்கள்

  1. கட்சியின் எல்லா குழுக்களும் விவாதிக்கும் பொருட்டு நகல் தீர்மானத்தை கட்சியின் அகிலஇந்திய மாநாடு கூடுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே மத்தியக்குழு வெளியிடவேண்டும். வெளியிடப்பட்ட நகல் தீர்மானத்தை மொழிபெயர்த்து தேவையான பிரதிகளைத் தயாரித்து அவற்றை குறைந்தபட்ச அவகாசத்திற்குள் எல்லா கிளைக் குழுக்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டியது மாநிலக் குழுவின் கடமையாகும். தீர்மானத்தின் மீதான திருத்தங்களை நேரடியாக மத்தியக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். திருத்தங்கள் பற்றிய அறிக்கையை மத்தியக் குழு கட்சியின் அகில இந்திய மாநாட்டில் (கட்சி காங்கிரஸ்) தாக்கல் செய்யும்.
  2. ஒவ்வொரு மட்டத்திலும், அம்மட்டத்திலுள்ள குழு சமர்ப்பிக்கும் அறிக்கைகள் மற்றும் தீர்மானங்களின் அடிப்படையில் மாநாடு நடத்தப்படும்.

கட்சி மாநாடுகளில் கடந்த மாநாட்டிற்குப் பின் நடந்த வேலை அறிக்கையையும் கட்சி மாநாடு, கட்சியின் அகில இந்திய மாநாடு எடுத்த நிலைபாட்டை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட அரசியல் ஸ்தாபன பிரச்சனைகள் பற்றியும் விவாதித்து பரிசீலனை செய்யப்பட வேண்டும். கட்சியின் அகில இந்திய மாநாட்டின் நகல் அரசியல் தீர்மானத்தின் மீதானவிவாதம் அமைப்பு சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி நடத்தப்பட வேண்டும்.

பிரிவு-23

வெகுஜன ஸ்தாபனங்களில் பணி புரியும் கட்சி உறுப்பினர்கள்

வெகுஜன அமைப்புகளில் பணியாற்றும் கட்சி உறுப்பினர்களும் அமைப்புகளின் நிர்வாகிகளும் பிராக்ஷன்களாகவோ அல்லது பிராக்ஷன் குழுக்களாகவோ தங்களை அமைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட கட்சிக் குழுவின் வழிகாட்டுதல்படி இயங்க வேண்டும். ஒற்றுமை, வெகுஜன அடிப்படை மற்றும் வெகுஜன அமைப்புகளின் போராட்ட சக்தி ஆகியவற்றை மேம்படுத்த இவர்கள் முயற்சியெடுக்கவேண்டும்.

விதிகள்

  1. மத்திய, மாநில மாவட்ட அளவிலான கட்சி குழுக்கள் தனது உறுப்பினர்களில் இருந்தும் மற்றும் பல்வேறு அரங்குகளில் வேலை செய்யும் கட்சி உறுப்பினர்களின் வேலைகளுக்கு வழிகாட்டும் தகுதியுள்ள உறுப்பினர்களையும் கொண்ட உபகுழுவை அமைக்கலாம். அவர்கள் சம்பந்தப்பட்ட அரங்க பிரச்சனைகளில் தேர்ச்சி பெறுவார்கள். கட்சியைக் கட்டுவதை கண்காணிப்பார்கள். பல்வேறு வெகுஜன ஸ்தாபனங்களில் கட்சி யூனிட்களாகவோ அல்லது பிராக்ஷன்களாகவோ அமைத்துக் கொண்டு வேலை செய்யும் கட்சி உறுப்பினர்களின் நடவடிக்கையை ஒருங்கிணைத்து வழிகாட்டுவார்கள். அங்கெல்லாம் கட்சிக் கொள்கைகள் பின்பற்றப்படும்படியும் அமலாகும்படியும் பார்த்துக் கொள்வார்கள்.
  2. பல்வேறு மட்டத்தில் வெகுஜன ஸ்தாபனம் அல்லது அந்த ஸ்தாபனத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் வேலை செய்யும் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அந்த அமைப்பின் பிராக்ஷனாக அமைவார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட கட்சி கமிட்டிகளின் வழிகாட்டுதல் மற்றும் முடிவுகளுக்குட்பட்டு செயல்படவேண்டும்.
  3. ஒரு வெகுஜன ஸ்தாபனத்தில் பல்வேறு மட்டங்களில் பிராக்ஷன் வேலை செய்யும் உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தால்அவரவர்களுக்கு இடையில் ஒரு பிராக்ஷன் குழு அமைக்கலாம். சம்பந்தப்பட்ட கட்சி குழு பிராக்ஷன் குழுக்களை அமைக்கும்போது அதில் கட்சிக் குழுவில் உள்ளவர்களைத்தவிர குழுவில் இல்லாத, ஆனால் போதுமான முதிர்ச்சியுள்ள அல்லது கட்சி குழுவால் தேவையெனக் கருதப்படும் வெகுஜன அனுபவம் உள்ள தோழர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
  4. மேற்குறிப்பிட்டவாறு அமைக்கப்பட்ட பிராக்ஷன் குழுக்கள் சம்பந்தப்பட்ட கட்சிக் குழுவின் முடிவுகளை குறிப்பிட்ட வெகுஜன ஸ்தாபனங்களில் நிர்வாக அல்லது பொதுக்குழுவின் மூலம் அமல்படுத்த வேண்டும். கட்சிக் குழுவின் முடிவுகளை அமல் நடத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அந்த வெகுஜன ஸ்தாபனத்தின் பிராக்ஷன் குழு மேற்கொள்ளும்.

பிரிவு-24

உப விதிகள்

கட்சியின் அமைப்புச் சட்டத்தின் கீழ் அதற்குப் பொருந்துகிற வகையில் மத்தியக் குழு விதிகளையும், உபவி திகளையும் ஏற்படுத்தலாம். கட்சியின் அமைப்புச் சட்டத்தின் கீழும் அதற்குப் பொருந்துகிற வகையிலும் மாநில குழுக்களும் விதிகளையும் உப விதிகளையும் ஏற்படுத்தலாம். இவை மத்திய குழுவின் அங்கீகாரத்துக்கு உட்பட்டதாகும்.

பிரிவு-25

திருத்தம்

கட்சியின் அமைப்புச் சட்டம் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் மட்டுமே திருத்தப்பட முடியும். மேற்படி கட்சியின் அகில இந்திய மாநாடு கூடுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்சியின் அமைப்புச் சட்டத்தில் திருத்தம்பற்றிய முன்மொழிவுகளின் அறிவிப்பு கொடுக்கப்பட வேண்டும்.