சென்னை, தாம்பரம், கடலூர் உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள நகரம் மற்றும் கிராமங்களில், நீர் நிலை புறம்போக்கில் இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளாக, பெரும் செலவு செய்து வீடு கட்டி குடியிருக்கும் மற்றும் குடிசை வாழ் மக்களை வெளியேற்றுவது நியாயமல்ல. மாநில அரசு உயர்நீதிமன்ற தீர்ப்புகளை காரணமாக கூறி, வெறியேற்றும் செயல்களில் ஈடுபடுகிறது. இப்படியான தீர்ப்புகளுக்கு எதிராக மாநில அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். ஆனால் குடியிருப்போர் நலச் சங்கங்களும், சம்மந்தப்பட்ட மக்களுமே மேல்முறையீடு அல்லது நீதிமன்ற தலையீடுகளை செய்ய தள்ளப்படுகின்றனர்.
வணிகம் மற்றும் அரசுத்துறை பயன்பாடுகளுக்கு பொருந்தாத நீதிமன்ற தீர்ப்புகள், சாதாரண குடிமனைப் பட்டாக்களுக்கு அமலாக்குவது நியாயமற்றது. குறிப்பாக பொதுச் சொத்துக்களை தனியாரின் சூறையாடலுக்கு அனுமதிக்கும் போக்கு ஆகும். இந்த பாரபட்சமான அணுகுமுறையை கைவிட வேண்டும். எனவே மாநில அரசு மற்றும் வருவாய் துறை சரியான தலையீடு செய்து குடியிருப்புகளுக்கு நியாயம் வழங்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.