கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்கு அளித்த வாக்குறுதியின்படி அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்கிடவும், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் பணியிடங்களை உருவாக்கிடவும், தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிடவும், அரசாணை 354ன் படி 12 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருக்கும் ஊதிய அமைப்பை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் நாளை (2025, ஜூன் 11) சேலம் மேட்டூரிலிருந்து சென்னை வரை நடைபயண போராட்டம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளனர்.
அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்வதோடு, தமிழக அரசு உடனடியாக போராட்டத்தில் ஈடுபடவுள்ள அரசு மருத்துவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் சுமூகத் தீர்வு காண வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது.
(பெ. சண்முகம்) மாநில செயலாளர்