பாலஸ்தீன மக்கள் மீது இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசு வெறித்தனமான தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி முதல், இன்று வரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்களும், குழந்தைகளும் பெரும் எண்ணிக்கையாகும். நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த கட்டமைப்புகள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், அகதி முகாம்கள் உள்ளிட்டவைகளை இஸ்ரேல் குறிவைத்து தாக்கி அழித்து வருகிறது. உணவும், மருந்தும் இல்லாமல் பச்சிளம் குழந்தைகள் மடிந்து வருவது கண்டு, பாலஸ்தீன மக்கள் கதறி அழும் குரல் உலகின் மனசாட்சியை உலுக்கி வருகிறது.
அமெரிக்காவின் ஆயுத உதவி மற்றும் முழுமையான ஆதரவோடு இஸ்ரேல் அரசு இந்த இனப்படுகொலையை நிகழ்த்தி வருகிறது. பாலஸ்தீன மக்களின் மீது இன அழிப்பு வெறியோடு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை உலக நாடுகள் வன்மையாக கண்டித்து போரை நிறுத்தும்படி வலியுறுத்தி வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பு நாடுகளாக உள்ள 193 நாடுகளில் 149 நாடுகள் இஸ்ரேலின் போர் வெறிக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்துள்ளன. பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக ஆரம்ப நாள் முதல் ஆதரவு தெரிவித்து வந்த இந்தியா, மோடி ஆட்சியில் வழி வழியான நிலையை மாற்றி, இனவெறி இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. அண்மையில் ஐ.நா சபையில் நடந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் நாட்டின் பாரம்பரியமான வெளியுறவுக் கொள்கைக்கு மோடியின் அரசு துரோகமிழைத்துள்ளது.
இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் கூடிய இடதுசாரி கட்சிகள் பாலஸ்தீன மக்களுக்கு ஒருமைப்பாடும் ஆதரவும் தெரிவிக்கும் வகையிலும், இனவெறி பிடித்த இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கும் முறையிலும் நாடு தழுவிய இயக்கத்துக்கு அறைகூவல் விடுத்துள்ளன. இதன்படி வரும் 24.06.2025 அன்று மாலை 4.00 மணிக்கு சென்னை, சைதாப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய கட்சிகளின் சார்பில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
· இஸ்ரேல் அரசின் இனவெறி கொண்ட படுகொலைகள் மற்றும் போர்க் குற்றச் செயல்களை கண்டிக்கின்றோம்.
· தேச உரிமைக்கும், கண்ணியமான, இறையாண்மை கொண்ட சுதந்திர தாயக உரிமைக்கும் போராடும் பாலஸ்தீன மக்களுக்கு துணை நிற்போம்.
· மோடியின் ஒன்றிய அரசு, இந்தியாவின் பாரம்பரிய வெளியுறவுக் கொள்கை நெறிகளில் உறுதியாக நிற்க வேண்டும்.
· பாலஸ்தீன மக்களின் உரிமைப் போராட்டத்தை தொடர்ந்து ஆதரிக்க வேண்டும்.
· இனவெறிப் பிடித்த இஸ்ரேலுக்கு இந்தியா ஆயுத விற்பனை செய்து ஒத்துழைத்து வருவதை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த முழக்கங்களோடு நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக சக்திகளும், அனைத்து தரப்பு மக்களும் திரளாக கலந்து கொண்டு பேராதரவு அளிக்க வேண்டுமென அன்புடன் அழைக்கின்றோம்.
(பெ.சண்முகம்) (இரா. முத்தரசன்) (பழ. ஆசைத்தம்பி)
மாநிலசெயலாளர் மாநில செயலாளர் மாநில செயலாளர்
சிபிஐ(எம்) சிபிஐ சிபிஐ(எம்.எல்.)லிபரேசன்