தீர்மானங்கள்மத்தியக் குழு

3-5 ஜூன் 2025 சிபிஐ(எம்) மத்தியக்குழு முடிவுகள்

June 6 cc communique

24வது அகில இந்திய மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்தியக்குழு, ஜூன் 3-5, 2025 அன்று புதுதில்லியில் உள்ள HKS சுர்ஜித் பவனில் முதன்முறையாகக் கூடியது. பயங்கரவாதத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள், வடகிழக்கில் ஏற்பட்ட பருவமற்ற வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு மத்தியக்குழு இரங்கல் தெரிவித்தது.

அரசியல் முன்னேற்றங்கள் குறித்து விவாதித்து வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு;

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைப் பயன்படுத்தி மதவெறியை கூர்மைப்படுத்தும் பாஜகவை நாடு முழுவதும் அம்பலப்படுத்துவோம்!

காசாவில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு காசாவை முற்றிலுமாக அழித்து அதை தன்னு டன் இணைத்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்ட இஸ்ரேலிய இனப்படுகொலை தொடருவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கண்டிக்கிறது. பாஜக அரசாங்கம் உடனடியாக ஆயுத ஏற்றுமதியை நிறுத்தி, இஸ்ரேலுடனான இராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகளை துண்டிக்க வேண்டும். சுதந்திர பாலஸ்தீனம் என்ற நிலைப்பாட்டில்  அரசாங்கம் உறுதியாக நிற்க வேண்டும். பாலஸ்தீனத்துடன் நமது ஒற்று மையை மீண்டும் வலியுறுத்த வேண்டும்; இரு நாடுகள் தீர்வுக்கான நமது நீண்டகால வெளியுறவுக் கொள்கை நிலைப்பாடுகளில் உறுதியாக இருக்க வேண்டும்.

கூர்மைப்படுத்தப்படும் மதவெறி;

வெறுப்புப் பிரச்சாரம் ஆர்எஸ்எஸ்/பாஜக தங்கள் மதவெறிப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி, சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை மேலும் பரப்பி வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மீதும், இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் மற்றும் வெளியுறவுச் செயலாளர் மீதும் கேலியும் கிண்டல்களும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இவ்வாறு இழிசெயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் அமைதியாக இருந்து வருகிறது. அதன்மூலம், இழி செயல்களில் ஈடுபடுபவர்களின்  வெறுப்பு பிரச்சாரத்திற்கு மோடி அரசாங்கம் மறைமுக ஆதரவைக் காட்டி வருகிறது.  

பிரதான கார்ப்பரேட் ஊடகங்களில் பெரும்பாலானவை நமது நாட்டின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும் வகையில், தேசிய வெறி, இனவெறி விஷத்தைப் பரப்பி வருகின்றன. மறுபக்கத்தில், அனைத்து விமர்சனக் குரல்களையும் ஒடுக்க அரசாங்கம் தனது காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இத்தகைய தாக்குதல்கள் அரசாங்கத்தின் நவீன பாசிச குணாம்சங்களை வெளிப்படுத்துகின்றன.

புலம்பெயர்ந்த முஸ்லிம்கள், குறிப்பாக வங்க மொழி பேசும் நபர்கள், வங்கதேசத்தவர் என குறி வைக்கப்பட்டு வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்படுகிறார்கள். பாஜக அமைச்சர்களும் தலைவர்களும் மிகவும் புண்படுத்தும் விதத்தில் கருத்துக்களைக் கூறி வருகின்றனர். நாடு முழுவதும் பயங்கரவாதத் தாக்குதல்களாலும், மதவெறி வெறுப்பாலும் கலங்கி நிற்கும் அதே வேளையில், பாஜக அரசு தனது கூட்டுக்களவாணி கார்ப்பரேட்டுகள் ஆதாயம் அடையும் விதத்தில் நவீன தாராளமயக் கொள்கைகளை மூர்க்கத்தனமான முறையில் பின்பற்றி வருகிறது.

மக்களைப் பிளவுபடுத்தும் ஆர்எஸ்எஸ்/பாஜக மதவெறிக் கொள்கைகள், மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதையும், மக்களின் ஒற்றுமையை உடைப்பதையும், மக்களின் வாழ்வாதாரங்கள் மீதான தாக்குதலைத் தொடர்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

இந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான முகம்

நமது பொருளாதார நிலைமையின் உண்மை நிலையை அரசாங்கம் வேண்டுமென்றே மறைத்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியப் பொருளாதாரம் ஜப்பானை முந்தி நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்பது உண்மையிலேயே சந்தேகமே. இரு நாடுகளுக்கும் இடையில் மிகப்பெரிய அளவில் உள்ள தனிநபர் வருமான வேறுபாடுகளை மறைக்கிறது. அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வுகள், உழைக்கும் மக்களின் வாழ்வாதார நெருக்கடி ஆகியவை நமது பொருளாதாரத்தின் உண்மையான அம்சங்களாகும். இவை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

முக்கியத்துவம் வாய்ந்த துறைகளைத் தனியாருக்குத் தாரைவார்த்தல்

அணுசக்தி உற்பத்தியில் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதித்திடவும், தனியாரிடம் தாரை வார்த்திடவும் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுள்ளது. அமெரிக்க அணுஉலை உற்பத்தியாளர்களின் நுழைவை செயல்படுத்த, இந்திய மக்களின் பாதுகாப்பை விலையாகக் கொடுத்து, அணுசக்தி பொறுப்புச் சட்டவிதியை திருத்த அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. முதல் முறையாக, போர் விமானங்களின் உற்பத்தி தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. பாதுகாப்பு, சுரங்கம் மற்றும் அணுசக்தி போன்ற முக்கிய துறைகளைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது, நமது இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கும் அவமானமும், ஆபத்தும் ஆகும்.

ஏகாதிபத்திய அழுத்தங்களுக்கு அடிபணிதல்

இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவுடன் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் (Bilateral Trade Agreement) கையெழுத்திட இந்திய அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. ஜூலை மாதத்திற்கு முன்பு, அது ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை முடிக்க திட்டமிட்டுள்ளது.

வெளிவந்துள்ள செய்திகளின் படி, அமெரிக்காவின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக, பல்வேறு பொருட்களின் மீதான வரிகளைக் குறைக்க அரசாங்கம் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) மற்றும் மருந்துத்துறையை மோசமாக பாதிக்கிறது.

தேசிய பாதுகாப்பிற்கான சாத்தியமான தாக்கங்கள் குறித்த கவலைகள் இருந்த போதிலும், இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவைகளை அரசாங்கம் அங்கீகரிக்கும் தருவாயில் உள்ளது. அரசாங்கம் ஏற்கனவே இங்கிலாந்துடன் ஒரு தாராள வர்த்தக ஒப்பந்தத்தை (Free Trade Agreement) முடித்துள்ளது; மேலும் இதேபோன்ற பல ஒப்பந்தங்கள் வர இருக்கின்றன. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் வெளிப்படையானவை அல்ல.

விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான ஆலோசனைகள் அல்லது கவலைகள் எதுவுமே இல்லாமல் இந்த ஒப்பந்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்திய தொழிலாளர் வர்க்கம் மற்றும் மக்களின் நலன்களுடன் சமரசம் செய்யும் இத்தகைய ஒப்பந்தங்கள் அனைத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு எதிர்க்கிறது.

பொது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு

ஒன்றிய அரசு, வேண்டுமென்றே செய்த அதிகப்படியான தாமதத்திற்குப் பிறகு, இறுதியாக 2027 இல் பொது மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதாகவும், அதனுடன் சேர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்துவதாகவும் அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அரசாங்கம் பின்பற்ற விரும்பும் முறைகள் குறித்து பல்வேறு அச்சங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. அரசாங்கம் உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி இந்தப் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க வேண்டும்.

ஆளுநரின் அதிகாரங்கள் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு

ஆளுநர்களின் அதிகாரங்கள் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஒன்றிய அரசு ஏற்க மறுக்கிறது. மாநில சட்டமன்றங்களின் விருப்பங்களுக்கு  மதிப்பளிக்கவும் மறுக்கிறது. ஜனாதிபதியின் மூலமாக உச்சநீதிமன்றத்திற்கு இந்த அரசு சென்றுள்ளது. இது பாஜகவின் எதேச்சதிகார நிலைப்பாட்டையும் கூட்டாட்சி தத்துவத்தின் கோட்பாடுகளை அவமதிப்பதையும் பிரதிபலிக்கிறது.

ஜூலை 9 – பொதுவேலை  நிறுத்தத்திற்கு ஆதரவு

மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள ஜூலை 9 பொது வேலைநிறுத்தத்திற்கு கட்சியின் மத்தியக்குழு முழு ஆதரவை வழங்குகிறது. அதேநாளில், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்துகிறார்கள். வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் குழுக்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று மத்தியக்குழு அழைப்பு விடுக்கிறது.

வடகிழக்கில் வெள்ளம்

வடகிழக்கில் ஏற்பட்ட பருவம் தவறிய மழை – வெள்ளத்தால் பெரும் உயிர்ச்சேதமும், சொத்து  சேதமும் ஏற்பட்டுள்ளது. 36க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஒன்றிய அரசு உடனடியாகத் தலையிட்டு போதுமான நிவாரணம் மற்றும் மறுவாழ்வை உறுதி செய்ய வேண்டும்.

தேர்தல்கள்

பீகார் சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் அக்டோபர் 2025 இல் நடைபெற உள்ளன. மேலும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தோல்வியை உறுதி செய்யும் வகையில் கூட்டாகச் செயல்பட பீகாரில் உள்ள அனைத்து இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளுடன் மார்க்சிஸ்ட் கட்சி ஆலோசனை களைத் தொடங்கி இருக்கிறது.

முடிவுகள்

1.    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைப் பயன்படுத்தி, பயங்கரவாதம், போர் வெறி மற்றும் வகுப்புவாத வெறுப்பைப் பரப்பும் முயற்சிகளுக்கு எதிராக ஜூன் மாதத்தில் ஒரு வாரம் பிரச்சாரத்தை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு முடிவு செய்துள்ளது.

2.    கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தலைமையிலான குழு 2025 ஜூன் 10-11 தேதிகளில் காஷ்மீர் செல்கிறது. இக்குழுவின் மற்ற உறுப்பினர்கள்: அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அம்ராராம்.எம்.பி. (மக்களவை), மத்தியக்குழு  உறுப்பினர் கே.ராதாகிருஷ்ணன்.எம்.பி. (மக்களவை), மத்தியக்குழு அழைப்பாளர் ஜான் பிரிட்டாஸ்.எம்.பி. (மாநிலங்களவை), பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா. எம்.பி.  (மாநிலங்களவை), சு.வெங்கடேசன் எம்.பி. (மக்களவை) மற்றும் ஏ.ஏ.ரஹீம் எம்.பி. (மாநிலங்களவை).

3.    பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலைக்கு எதிராக ஒட்டுமொத்த கட்சி அணிகளும் உடனடியாக போராட்டங்களை நடத்தும்.

4.    அவசரநிலை பிரகடனத்தின் 50 ஆம் ஆண்டை முன்னிட்டு, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் தற்போதைய அரசாங்கத்தின் எதேச்சதிகாரத்தை அம்பலப்படுத்துவதற்கும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது என்று மத்தியக்குழு முடிவு செய்திருக்கிறது. அவசரநிலையின் போது ஆர்.எஸ்.எஸ்.இன் சந்தேகத்திற்குரிய பங்கை அம்பலப்படுத்த இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மத்திய செயற்குழு

மத்தியக்குழு விவாதித்து சில ஸ்தாபன முடிவுகளையும் எடுத்திருக்கிறது. அதன்படி எம்.ஏ.பேபி, பி.வி.ராகவலு, டி.முரளிதரன், ராஜேந்திர சர்மா, டாக்டர் கே.ஹேமலதா, விக்ரம்சிங், கே.என்.உமேஷ் ஆகியோரை கொண்ட மத்திய செயற்குழு (Central Secretariat) அமைக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply