செய்தி அறிக்கைமாநில செயற்குழு

பாடுவதை நிறுத்திக் கொண்ட கரிசல்குயில் கிருஷ்ணசாமி! சிபிஐ(எம்) இரங்கல்!

Ss

தனது இனிய குரலால் தமிழகம் முழுவதும் உழைப்பாளி மக்களை ஈர்த்த கரிசல் குயில் கிருஷ்ணசாமி அவர்களின் மரணச் செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

தோழர் கிருஷ்ணசாமி, விருதுநகர் மாவட்டம் நரிக்குளம் எனும் சிற்றூரில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர். தபால் துறையில் பணியாற்றியபோது சங்க தொடர்புகளின் மூலம் தமுஎகச அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு 1980ம் ஆண்டில் நெல்லை மாவட்டத்தில் கரிசல்குயில் இசைக்குழு உருவானதில் முக்கியப் பங்காற்றியவர். தனது இனிமையான குரல் வளத்தால் தமிழகத்தின் பட்டித் தொட்டி எங்கும் கரிசல்குயில் இசைக்குழுவை கொண்டு சென்றவர். வேண்டான்டா வெள்ளை மாத்திரை, கட்டபொம்மனும் சேரனும் சோழனும் முட்டி மோதுற ரோடு, கலெக்டர் வாராரு காரு ஏறி தாரு ரோட்டுல, எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே,  இலைகள் அழுதுவிடும் பனி இரவு என கரிசல்குயில் கிருஷ்ணசாமி பாடும் பாடல்கள் எளிய மக்களின் மனங்களைத் தொட்டன. தனது எளிய பாடல்கள் மூலம் உழைப்பாளி மக்களை தட்டியெழுப்பியவர்.  கலை இரவு மேடைகளில் விடிய விடிய அவரது கானங்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். அவரது குரலின் வளமும், உணர்வும் எட்ட முடியாத உயரத்தை கொண்டது. தோழர் திருவுடையானை அடையாளம் கண்டு வளர்த்து எடுத்ததில் கரிசல்குயில் கிருஷ்ணசாமிக்கு முக்கிய பங்கு உண்டு. மதுரையில் நடந்து முடிந்த 24வது அகில இந்திய மாநாட்டிலும் கரிசல் குயில் கிருஷ்ணசாமி இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடினார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நீண்ட காலமாக உறுப்பினராக இருப்பவர். அவரது மறைவு இடதுசாரி இயக்கத்திற்கும், கலை இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கரிசல் இசைக்குழுவினருக்கும், தோழர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)  மாநில செயற்குழு தனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

(பெ. சண்முகம்)

மாநில செயலாளர்

Leave a Reply