தீர்மானங்கள்மாநிலக் குழு

வடகிழக்கு பருவமழை தொடக்கம்! முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முன்னெடுக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!

Rain

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2025 செப்டம்பர் 18,19 தேதிகளில் கோவில்பட்டியில் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ. வாசுகி , மாநில செயலாளர் பெ.சண்முகம் , மத்திய குழு உறுப்பினர்கள் பி.சம்பத், கே.பாலபாரதி, மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு.

தீர்மானம் – 1

வடகிழக்கு பருவமழை தொடக்கம்! முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முன்னெடுக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!

இமாச்சல்பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, பஞ்சாப், புதுதில்லி, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் ஏற்பட்ட கனமழை, மேகவெடிப்பு காரணமாக அதிகமான உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளன. தமிழகத்தில் கனமழையோ, மேகவெடிப்போ ஏற்படும் பட்சத்தில் அதை எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும், தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் கனமழையினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் மழைநீர் வடிகால் கால்வாய் பணிகளை விரைவில் முடித்தல், ஏரி-குளங்களை தூர்வாருதல், மழை நீர் தேங்கும் போது உடனுக்குடன் நீரை வெளியேற்றுவதற்கான மின் மோட்டார் உள்ளிட்ட ஏற்பாடுகள், ஆகாய தாமரை அகற்றுதல், வெள்ள அபாய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான தங்குமிடங்களை ஏற்படுத்துதல், பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு பணிகள், படகுகள் உள்ளிட்டவைகளை தயார் நிலையில் வைத்தல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட அளவில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, மாவட்ட அளவிலான குழுக்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிபிஐ (எம்) மாநிலக்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் – 2

தமிழக அரசின் பொதுத்துறைகளில் பல்லாயிரக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்பிடாமல் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை பணிக்கு அமர்த்துவதை கைவிடுக!

தமிழகத்தில் மின்சாரம், போக்குவரத்து, குடிநீர் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களிலும், மாநில அரசு துறைகளிலும் சுமார் 4 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர்.  இந்த நிலையில் தமிழக அரசு காலிப்பணியிடங்களை நிரப்பாமல், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் லிமிட்டெட் (OVERSEAS MANPOWER CORPORATION LTD) என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. 

இந்நிறுவனத்தின் மூலம் அலுவலக பணியாளர்களர், தூய்மை பணியாளர்கள், ஓட்டுநர், தட்டச்சர், கணக்குப் பணியாளர்கள், மேலாளர் உள்ளிட்ட 22 பணிகளுக்கு தொகுப்பூதியம் மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்டவைகளை சேர்த்து மாதாந்திர சம்பளமாக குறைந்த ஊதியம்  நிர்ணயம் செய்யப்பட்டு, அரசின் அனைத்து துறைகளிலும் பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

நிரந்தரத்தன்மை உள்ள பணியிடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்கக் கூடாது என்று ஒப்பந்த தொழிலாளர் முறைப்படுத்துதல் மற்றும் நீக்குதல் சட்டம் 1970 தெளிவாக கூறுவதை, சட்டம் இயற்றிய மாநில அரசே மீறுவது இயற்கை நீதிக்கு எதிரானது.

அரசு துறைகளில் காலிப் பணியிடங்களை, தமிழக அரசு தேர்வாணையம் மூலம் தேர்வு செய்து நியமனம் செய்தால் இட ஒதுக்கீடும், சமூக நீதியும் பாதுகாக்கப்படும். ஆனால், இதுபோன்ற ஏஜென்சிகளை உருவாக்கி நிரந்தர பணிகளில் ஒப்பந்த முறையை  புகுத்துகின்ற பொழுது, பணிப் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பான ஓய்வூதியம், ஆண்டு உயர்வு, பதவி உயர்வு என அனைத்தும் பறிபோகும். இட ஒதுக்கீடும் கேள்விக்குறியாகும்.

ஏற்கனவே அரசுத்துறையில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி, காண்ட்ராக்ட் முறைகளில் பல்லாண்டுகளாக பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களை நிரந்தரப்படுத்த வேண்டுமென தொடர்ந்து போராடி வரும் நிலையில் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக தமிழக அரசு மீண்டும் ஒப்பந்த முறையை திணிப்பது, தொழிலாளர்கள் – இளைஞர்கள் மத்தியில் பெரும் கோபாவேசத்தை உருவாக்கும் என்பதை சிபிஐ (எம்) சுட்டிக்காட்டுகிறது.

எனவே, திமுக அரசு 2021 இல் வெளியிட்ட தேர்தல் அறிக்கை எண் 153 இல் தெரிவித்துள்ளவாறு மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பல ஆண்டுகளாக பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். மாநில அரசின் அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் லிமிட்டெட் மூலம் பணியாளர்களை அரசுத்துறைகளில் நியமிப்பது என்ற அரசானையை உடனடியாக கைவிட வேண்டுமெனவும், காலிப்பணியிடங்களை நிரந்தரப்பணி அடிப்படையில் பூர்த்தி  செய்திட வேண்டுமெனவும் சிபிஐ (எம்) மாநிலக்குழு தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் – 3

தூய்மை பணி தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்திடுக! தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் அரசாணைகளை திரும்ப பெறுக!!

தமிழகம் முழுவதும் சென்னை உள்ளிட்டு பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மை பணி தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியம்,  பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். விலைவாசி உயர்வு, வாழ்க்கைத் தேவை, பணிச்சூழல் இவற்றைக் கருத்தில் கொண்டு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ஊதியம் வழங்குவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். தொழிலாளர் என்ற அடிப்படையில் தொழிலாளர் சட்டங்கள் வரையறுத்துள்ள உரிமைகளை பறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அரசாணைகள் 10, 139, 152 ஆகியவற்றை முழுமையாக திரும்ப பெற வேண்டும்.  உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கை வெகுமக்களின் கோரிக்கையாக, உருவெடுத்து உள்ள சூழலில் தமிழ்நாடு அரசு இதை உரிய வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

பொது சுகாதாரத்தை, தூய்மைப் பணியை இயந்திரமயமாக்குவது, நவீனமயமாக்கும் வகையில் அரசு பொறியியல் கல்லூரிகளில் சுகாதார பொறியியல் துறை பாடப்பிரிவு (சானிட்டரி இன்ஜினியரிங்) உருவாக்கப்பட வேண்டும். வளர்ந்த நாடுகளில் தூய்மை பணித்துறையில் நடைமுறைப்படுத்தும் அறிவியல் தொழில்நுட்ப செயல்பாடுகளை தமிழ்நாட்டில் அமல்படுத்த உரிய உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சிபிஐ (எம்) மாநிலக்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

(பெ. சண்முகம்)
மாநில செயலாளர்