இரங்கல்

தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் மறைவு! சிபிஐ(எம்) இரங்கல்!!

Death

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடி தலைவர்களில் ஒருவரான தோழர் பி.எஸ். தனுஷ்கோடி அவர்களின் மகனும், தமிழ்நாடு யூனியன் ஆப் ஜார்னலிஸ்ட் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவருமான தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் ஆரம்ப காலத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில அலுவலகத்தில் அலுவலக செயலாளராகப் பணியாற்றியவர். பின்பு தினபூமி பத்திரிகையில் நிருபராக பணியாற்றினார். தமிழ்நாடு யூனியன் ஆப் ஜார்னலிஸ்ட் சங்கத்தின் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பத்திரிகையாளர்களின் நலன்களுக்காக தனது இறுதி மூச்சுவரை செயல்பட்டவர். குறிப்பாக, கிராமப்புற மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் கடைக்கோடி நிருபர்களுக்கும் அரசின் அனைத்து அங்கீகாரங்களும், சலுகைகளும் கிடைப்பதற்கு அயராது போராடியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக செயல்பட்டு வந்தவர். அவரது மறைவு பத்திரிகையாளர்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது இணையர், மகன், மகள் மற்றும் குடும்பத்தினருக்கும், பத்திரிகைத்துறை நண்பர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

(பெ. சண்முகம்)
மாநில செயலாளர்