இந்து சமய அறநிலையத் துறையில் இதுவரை கிரேடு 1 செயல் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்தில் சட்டம் படித்தவர்கள் மட்டுமே தேர்வெழுதி அலுவலர்களாக முடியும் என்ற நிலை இருக்கிறது. கோயில் சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளை நிர்வகிக்க சட்ட அறிவு அவசியமானதாக இருக்கிறது என்பதால், துறையின் இணை ஆணையர் பதவிக்கு சட்டம் படித்து இருப்பது அவசியமானதாகும்.
நீதிபதியாக இருந்து வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்டு பூசல்களை தீர்க்கும் இடமாக இணை ஆணையர் பொறுப்பு நீதித்துறை சார்ந்து முக்கியமானதாக இருக்கிறது. இந்நிலையில் சட்டம் பயிலாதவர்களும் நேரடி நியமனத்தின் மூலம் உதவி ஆணையர்களாக, கிரேடு 1 செயல் அலுவலர்களாக நியமிப்பதற்கும், மேலும், அவ்விடங்களை வருவாய்த் துறையினரை வைத்து நிரப்புவதற்கும் தற்போதுள்ள இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் 9வது சட்டப் பிரிவை திருத்தி பிரிவு 2ஐ ரத்து செய்ய உள்ளதாக அறிகிறோம். இது பொருத்தமற்றதும், அறநிலையத்துறை செயல்பாடுகளை முடக்குவதுமாகும். எனவே, இந்த சட்டத்திருத்தத்தை அரசு கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
இதேபோன்று, ஊரக வளர்ச்சித் துறையில் இதுகாரும் திட்ட இயக்குநர் பொறுப்புகள் பதவி உயர்வு மூலமாகவோ அல்லது ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்டோ நிரப்பப்பட்டு கொண்டிருக்கின்றன. தற்போது அந்த பணியிடங்களில் தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட திட்ட இயக்குநர்களாக ஐஎப்எஸ் அதிகாரிகளை நியமிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பொறுப்புகளோடு எவ்வித தொடர்பும் இல்லாத அதிகாரிகளை இப்படி நியமிப்பது தங்கள் பொறுப்புகளை சரிவர நிறைவேற்றுவதற்கு உதவாது. எனவே, இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண் 2731 நாள் 28.07.2026ஐ ரத்து செய்து பழைய நிலையே தொடர வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
இதேபோன்று, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி, ஊரக மருத்துவ நலத்துறை மற்றும் பொது மருத்துவம் மற்றும் நோய் தடுப்பு துறை ஆகிய துறைகளின் இயக்குநர் பொறுப்புகளுக்கு தற்போதுவரை பதவி உயர்வின் மூலம் மருத்துவர்களால் நிரப்பப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. தற்போது, இந்த பொறுப்புகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இது மருத்துவத்துறையை சார்ந்த பணிகளை வேறு துறையில் பயின்றவர்களால் திறம்பட நிர்வகிக்க வாய்ப்பில்லை. எனவே, மேற்கண்ட 3 துறைகளிலும் தற்போதைய நிலையையே தொடர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
(பெ.சண்முகம்)
மாநில செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > செய்தி அறிக்கை > இந்துசமய அறநிலையத் துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் நியமனங்களில் நடப்பு நிலையே தொடர சிபிஐ(எம்) வலியுறுத்தல்!
இந்துசமய அறநிலையத் துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் நியமனங்களில் நடப்பு நிலையே தொடர சிபிஐ(எம்) வலியுறுத்தல்!
posted on







