ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டின் மீது மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக திணிப்பதை நியாயப்படுத்தியதுடன், மாநிலத்தின் நிதி உரிமையை வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஆணவமாகப் பேசியிருப்பதை சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
தேசிய கல்விக் கொள்கையையும், மும்மொழிக் கொள்கையையும் தமிழ்நாடு ஏற்க மறுத்தால் ரூ.5 ஆயிரம் கோடி நிதியை வழங்க முடியாது என்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏற்கனவே கூறியிருந்தார். அரசியல் சட்டத்திற்கு விரோதமான இந்தப் போக்கை கண்டித்தும், தமிழ்நாட்டின் நிதி உரிமை, கல்வி உரிமையை வலியுறுத்தியும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும், தமது தேவைக்கேற்ற விதத்தில் கல்விக் கொள்கையையும், மொழிக் கொள்கையையும் தீர்மானிக்கும் உரிமை உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் நடைபெற்ற மொழிப் போராட்டத்தை தொடர்ந்து, இருமொழிக் கொள்கை உறுதிசெய்யப்பட்டது. ஆனால், ஒற்றை ஆட்சிக் கொள்கையோடு ஆணவமாகச் செயல்படும் பாஜக, தமிழ்நாட்டுக்கு நிதியை மறுப்பதன் மூலம் மொழிக் கொள்கையை திணிக்கப் பார்க்கிறது.
அதன் வெளிப்பாடாகவே, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை உதாசீனப்படுத்திய ஒன்றிய அமைச்சர், தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகளை நாகரீகமற்றவர்கள் என்று ஆணவமாக பேசியுள்ளார். பலதரப்பு கண்டனத்திற்கு பிறகு இந்தப் பேச்சை அவர் திரும்பப் பெற்றாலும் அது மட்டுமே போதுமானதல்ல என சி.பி.ஐ(எம்) கருதுகிறது.
ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ஆணவப் போக்கிற்காக தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்பதுடன், மாநிலத்துக்கு தர வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டுமென சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
(பெ.சண்முகம்)
மாநில செயலாளர்