“சம வேலைக்கு சம ஊதியம்” என்ற கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்களில் ஒரு பகுதியினர் நான்காவது நாளாக போராடி வருகிறார்கள். 2009, மே 31 வரை நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கும், 2009 ஜூன் 1ந் தேதிக்குப் பிறகு நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே நிலவும் ஊதிய முரண்பாட்டைக் களைந்திட கோரி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. அடிப்படை ஊதியத்தில் மட்டும் ரூ 3170 குறைவாக பெறும் சூழல் 2009 மே 31க்கு முன்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 16 ஆண்டுகளில் இழப்பு இன்னும் பல மடங்குகளாக உள்ளன.
ஒரே கல்வித் தகுதி, ஒரே பணியை ஆற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கிடையே இத்தகைய முரண்பாடு தொடர்வது பொருத்தமல்ல; இயற்கை நீதிக்கும் எதிரானது. இவர்களின் போராட்டம் காவல்துறையின் அடக்குமுறைக்கு ஆளாவதும் கைது நடவடிக்கைகளுக்கு உள்ளாவதும் சரியல்ல.
இத்தகைய ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்று தெரிவித்திருந்த நிலையிலும் எதுவும் நிறைவேற்றப்பட்டாததாலேயே இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சமவேலைக்கு, சம ஊதியம் என்ற நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் இடைநிலை ஆசிரியர்களின் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி 16 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
(பெ. சண்முகம்)
மாநில செயலாளர்







