தீர்மானங்கள்மாநில செயற்குழு

நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து சாதிவெறியர்கள் கொடூர தாக்குதல்: சிபிஐ(எம்) கடும் கண்டனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் நேற்று (02.11.2023) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

தீர்மானம் 1 :-

நெல்லை அருகே உள்ள மணிமூர்த்திஸ்வரம் பகுதியில் பட்டியிலினத்தை சார்ந்த இளைஞர்கள் மனோஜ்குமார் (21) மற்றும் அவரது நண்பர் மாரியப்பன் (19) இருவரும் கடந்த அக்டோபர் 31 அன்று இரவு 7:30 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற போது ஆற்றின் கரையோரமாக அவர்களை ஒரு கும்பல் வழிமறித்து அவர்களின் செல்போன் மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை பறித்து கொண்டு அவர்களின் ஊர் மற்றும் சாதியை கேட்டுள்ளனர். பட்டியிலினத்தை சார்ந்தவர்கள் என தெரிந்தவுடன் அருகாமையில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று மனோஜ் மற்றும் மாரியப்பனை நிர்வாணப்படுத்தி அவர்களது முகத்தில் சிறுநீர் கழித்து துன்புறுத்தியும், கம்பு மற்றும் ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். சுமார் 5 மணிநேரம் அவர்களை பிடித்துவைத்து அடித்துள்ளனர். பின்னர் இருவரும் தப்பித்து நிர்வாணமாகவே வீடு வரை சென்றுள்ளனர். அவர்கள் புகாரின் பேரில் சாதி ஆதிக்க நபர்கள் ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மனித தன்மையற்ற முறையில் நடந்துள்ள இச்சம்பவத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

நெல்லையில் சாதிய ரீதியிலான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இளைஞர்கள் மத்தியில் சாதிவெறி மற்றும் பெருகி வரும் போதை பழக்க வழக்கங்களும் முக்கிய காரணமாக உள்ளது. பெரும்பாலும் சமீபத்தில் நடந்துள்ள இந்த போன்ற தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள் 20 வயதுக்கு உட்பட்டவர்களே என்பது கவலைக்குரியது. மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தனிநபர் சார்ந்த பிரச்சனையாக, சட்டம் – ஒழுங்கு பிரச்சனையாக அணுகுவது பிரச்சனையை தீர்க்க உதவிடாது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்