தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கீழமை நீதிமன்றங்களில் 01.12.2025 முதல் அனைத்து வழக்குகளையும் இ-பைலிங் முறையில் மட்டுமே தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நிர்வாக உத்திரவின் படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு குற்றவியல் வழக்குகளில் காசோலை வழக்குகள் உள்ளிட்ட சில வழக்குகளை மட்டும் நீதிமன்றங்களில் தாக்கல் செய்ய இ-பைலிங் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. படிப்படியாக அனைத்து வழக்குகளும் இ-பைலிங் முறையில் கொண்டு வரப்படும் என்று உயர்நீதிமன்றம் 2 ஆண்டுகளுக்கு முன்னர் தெரிவித்தது. அதற்குள் உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சங்கங்கள் வலியுறுத்தின.
இந்நிலையில் அனைத்து நீதிமன்றங்களிலும் போதிய உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தாமல் 01.12.2025 முதல் தாக்கல் செய்யப்படும் அனைத்து வழக்குகளும், இ-பைலிங் முறையில் இணைய வழியில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்திரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ சேவை மையங்களில் ஒரு வழக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர்கள் பல மணி நேரம் காத்து நிற்கும் சூழலும், அதனால் வழக்கறிஞர்களின் அன்றாட பணிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பலரும் இணையத்தை ஒரே நேரத்தில் பயன்படுத்துகின்ற சூழலில் இணைய இணைப்பும் கடுமையாக தடைபடுகிறது. இதனால் இ-பைலிங் செய்வதற்கு நீண்ட நேரம் செலவாகிறது.
மேலும்,ஏற்கனவே இ-பைலிங் நடைமுறை ஒரு சில குற்றவியல் வழக்குகளில் நடைமுறையில் இருக்கிறது. அப்படி இ-பைலிங் மூலமாக தாக்கல் செய்யப்பட்ட பல வழக்குகள் பல மாதங்கள் ஆகியும் நீதிமன்றத்தால் அவ்வழக்குகளை உடனடியாக நம்பர் செய்யப்படாமல் இருந்து வருவதாக வழக்காடிகளும், வழக்கறிஞர்களும் குற்றம் சாட்டி வரும் நிலையில், தற்போது நீதிமன்றம் அனைத்து வழக்குகளையும் இ-பைலிங் மூலமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது வழக்காடிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து நீதிமன்றங்களிலும் இதை நடைமுறைபடுத்த இ-சேவை மையங்கள் முழுமையாக இன்னும் உருவாக்கப்பட்டு அதற்கான ஊழியர்கள் நியமிக்கப்படாத சூழலே பெருவாரியான நீதிமன்றங்களில் நிலவுகிறது. மேலும், இ-பைலில் நடைமுறை பல மாநிலங்களில் இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் இ-பைலிங் நடைமுறையை கண்டித்தும், போதிய உள்கட்டமைப்பு இல்லாமல் அதை அமலுக்கு கொண்டு வந்துள்ளதை எதிர்த்தும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழ்நாடு அரசு இந்த பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று சுமூகமாக தீர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்காடிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் பெரும் சிரமத்தையும், கால விரயத்தையும் ஏற்படுத்தி வரும் தற்போதைய இ-பைலிங் நடைமுறையை போதிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் நடைமுறைப்படுத்த கூடாது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு சென்னை உயர்நீதிமன்றத்தை கேட்டுக்கொள்கிறது.
(பெ. சண்முகம்)
மாநில செயலாளர்







