சிறப்பு பதிவுகள்மாநிலக் குழு

பொன்முடி அவர்களுக்கு உடனடியாக பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும்! ஆளுநர் ரவி பதவி விலக வேண்டும்!! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!!

திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு க.பொன்முடி மீதான தீர்ப்பைச் செயல்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையில், அவருக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்தது. இதற்கு சட்டரீதியான தடைகள் ஏதும் இல்லை. இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி முதலமைச்சரின் கோரிக்கையை நிராகரித்ததோடு பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்கு மறுப்பும் தெரிவித்திருந்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே கண்டித்திருந்தது.

            இந்நிலையில், ஆளுநரின் சட்டத்திற்கு புறம்பான இச்செயலுக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, பொன்முடி மீதான தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகு, பதவி பிரமாணம் செய்ய மறுப்பதற்கு ஆளுநருக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பியதுடன், இவரை நியமிக்க வேண்டுமென்று முதலமைச்சர் கூறினால் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக ஆளுநர் அதை செய்யத்தான் வேண்டும் என்றும், நாளைக்குள் க. பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டுமென்றும், இல்லையேல் உச்சநீதிமன்றம் ஆளுநருக்குக் கடுமையான உத்தரவினைப் பிறப்பிக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.  ஆளுநர் பதவி அடையாளத்திற்கு மட்டுமே என்றும், தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் மிகவும் கவலை தரக்கூடியவையாக உள்ளன எனவும் கருத்து தெரிவித்துள்ளது.

            எனவே, உச்சநீதிமன்ற உத்தரவின்படி உடனடியாக திரு க. பொன்முடி அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டுமென ஆளுநரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

            மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு எதிராகவும், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும், உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் விதத்திலும் செயல்படும் ஆளுநர் ஆர்.என். ரவி உடனடியாக பதவி விலக வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

(கே. பாலகிருஷ்ணன்)

மாநில செயலாளர்